Idam Porul Yaeval: ‛இடம் பொருள் ஏவல்’ 8 ஆண்டுகள் கிடப்பில் போட காரணம் என்ன? ஒரு குட்டி ப்ளாஷ்பேக்!
2014 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் ’ இடம் பொருள் ஏவல் ’ படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது.

இயக்குநர் சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படம் ஒருவழியாக விரைவில் வெளியாகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பரத், சந்தியா, பாவனா நடித்த கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குராக அறிமுகமான சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுமான தென்மேற்கு பருவகாற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் . இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றது. தொடர்ந்து கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ மக்களின் துன்பங்களையும், அவர் வாழ்வியலையும் ‘நீர்ப்பறவை’ படத்தின் மூலம் சொன்னார். இதனால் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகவும் சீனு ராமசாமி மாறினார்.
Just In




இந்த படத்தைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் ’ இடம் பொருள் ஏவல் ’ படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிவடைந்து பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஒரு சிக்கல் எழுந்தது.
நிதி நெருக்கடி
ஆனந்தம்,ரன்,சண்டகோழி,வேட்டை,பீமா படத்தின் மூலம் கமர்ஷியல் இயக்குநராக உருவான லிங்குசாமி தனது சகோதரர்களுடன் இணைந்து “திருப்பதி பிரதர்ஸ்” என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் தீபாவளி, பட்டாளம்,பையா,கும்கி, வழக்கு எண் 18/9, இவன் வேற மாதிரி, கோலிசோடா, மஞ்சப்பை ஆகிய பல படங்களை நேரடியாகவும், பிற நிறுவனத்துடன் இணைந்தும் தயாரித்தது. இதற்கிடையில் 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி தயாரித்து இயக்கிய அஞ்சான் படமும், 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் தயாரான உத்தம வில்லன் படமும் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
கிடப்பில் போடப்பட்ட படம்
இதனால் இடம் பொருள் ஏவலுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு சீனு ராமசாமி தர்மதுரை,கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். லிங்குசாமியும் சண்டகோழி-2 மற்றும் வாரியர் படங்களை மட்டுமே இயக்கினார். மேலும் சமீபத்தில் கூட செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் சிறை தண்டனை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அப்பிரச்சனையில் இருந்து லிங்குசாமி மீண்டார்.
இந்நிலையில் கிடப்பில் போடப்பட்ட இடம் பொருள் ஏவல் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்ன உயர்நீதிமன்றம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதியளித்துள்ளது என்றும் விரைவில் இடம் பொருள் ஏவல் வெளியிட தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.