நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி மரணங்கள்


கடந்த புதன்கிழமை அன்று நண்பகலில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அன்று மாலைக்குள் மேலும் 12 பேர் வரை உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வாந்தி, கண் எரிச்சல் போன்ற உபாதைகளுடன் நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுமார் 5 பேர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.


இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 27 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் என மொத்தமாக 49 பேரை கள்ளச்சாராயம் காவு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த விஜய்


இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை பார்த்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தமிழ்க வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி சென்று சிகிச்சைப் பெற்று வந்தவர்களை பார்வையிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை கலங்க வைத்தன. 


பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்









நாளை நடிகர் விஜய் தனது 50 வயதை எட்டுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் இழப்பை அனுசரிக்கும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 


தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து @tvkvijayhq மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது


தி கோட் பட அப்டேட்?


விஜய் நடித்து வரும்  தி கோட் படத்தின் அப்டேட் இன்று வெளியாக இருந்த நிலையில் விஜயின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அப்டேட் ஒத்திவைக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது