இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் அர்ஜூன், மதுபாலா நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். சமூக அவலங்களை தனது கதைகளின் அடிப்படையாக கொண்டு படமெடுக்கும் ஷங்கரின் பட யுக்தி அனைவரையும் கவர்ந்தது. தொடந்து காதலன்,இந்தியன்,  ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 என படங்களை எடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 






அவரை முன்னணி இயக்குநர் என்று சொல்வதை விட பிரமாண்ட இயக்குநர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனது படங்களில் புதுபுது டெக்னிக்குகளை அறிமுகப்படுத்தி நம்மை வியப்பில் ஆழ்த்துவார். தற்போது தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகும் ஷங்கர் அங்கு ராம்சரண் படத்தை எடுத்து வருகிறார். அதேசமயம் கமலை வைத்து இந்தியன் படத்தின் 2 ஆம் பாகத்தையும் இயக்குகிறார். சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஹீரோயினாக அறிமுகமானார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் அப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 






இதனிடையே ஷங்கர் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நடிகர்கள் கமல்ஹாசன், ராம்சரண் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரை வைத்து ஷங்கர் நண்பன் படத்தை இயக்கினார். இது இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காகும். இதன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் டிவியின் தொகுப்பாளர்களான கோபிநாத், சிவகார்த்திகேயன் ஆகியோர் விஜய்யிடம் இந்த படத்தை ஷங்கரை தவிர யாரேனும் ரீமேக் செய்ய அணுகியிருந்தால் நடிக்க ஒத்துக் கொள்வீர்களா? என கேட்கிறார். 






அதற்கு விஜய், கண்டிப்பாக மாட்டேன். இந்த படம் பண்ண காரணமே இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார் என்பதற்காகத் தான் என தெரிவிக்கிறார். நண்பன் படமும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.