எப்போதுமே ஹைலைட்டிலேயே இருக்க விரும்பும் நடிகர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பரபரப்பு ஏற்படுத்தியது முதல் நடிகர் ரம்யா கிருஷ்ணனுடனான ரியாலிட்டி ஷோ மோதல், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் சேர்ந்து எடுத்த போட்டோ ஷூட் என அடுத்தத்து செய்திகளில் இடம்பிடித்த வனிதா தற்போது மீண்டும் லைம்லைட்டில் வந்திருக்கிறார். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ் கான் ரோட்டில் புதிதாகப் பெண்களுக்கான ஆடை அலங்காரக் கடையைத் திறந்துள்ளார் வனிதா. வனிதா விஜயகுமார் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கடை குறித்து அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


வனிதா தற்போது 'அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 






முன்னதாக,  நடிகை வனிதா விஜயகுமார் திருமண சர்ச்சைகளுக்காகவே அறியப்பட்டவராகிவிட்டார்.


இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் முறிந்துவிட ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.


அந்த சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடே எதிரொலித்தது. வனிதாவால் அந்த எபிஸோட் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. செட்டுக்கே போலீஸார் தேடிவர பரபரப்பாக பேசப்பட்டார் வனிதா.
இந்நிலையில், சில காலம் வனிதா பற்றி சர்ச்சை ஏதும் எழாமல் இருந்தது. அப்போதுதான் அவர் தனது மூன்றாவது திருமண அறிவிப்பை வெளியிட்டார். பீட்டர்பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் நடந்தது. 






மகள்கள் முன்னிலையில் அவர் செய்துகொண்ட திருமணம் முற்போக்கானது என்று சிலரும், வளர்ந்த பிள்ளைகள் முன் இப்படியா என கலாச்சார காவல் கருத்துகளோடு சிலரும் வாதிட்டுவந்தனர்.


ஆனால், அந்தத் திருமணமும் நான்கே மாதங்களில் கசந்து முறிந்தது. பீட்டர்பாலை வனிதா அடித்து விரட்டினார் என்று பரபரப்பு செய்திகள் பரவின. பீட்டர்பாலின் மனைவியின் நிலையை வனிதா உணர்ந்து சோகத்தைப் பகிர்ந்த நிகழ்வுகளும் கூட நடந்தன.


பீட்டர் பாலைப் பற்றி வனிதா ஒரு உருக்கமான ட்வீட்டை அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "உண்மையில், என்னை விட அவருக்குப் போதைப் பழக்கம்தான் முக்கியம் எனத் தெரிந்தவுடன் மனம் உடைந்துவிட்டது. அனைத்து விஷயங்களிலுமே முட்டாளாக ஏமாந்து போய் நிற்கிறேன். சொந்தக் காலில் நின்று பீட்டர் பாலையும், என் குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறேன். வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் எனத் தவறான முடிவுகள் எடுக்க மாட்டேன். திட்டுகிறீர்களோ, பாராட்டுகிறீர்களோ ஏதோ ஒரு விஷயத்தில் அக்கறை இருப்பதால்தான் பேசுகிறீர்கள். இப்போது கூட என்னால் பீட்டர் பால் மீது குற்றம் சொல்ல முடியவில்லை. ஆனால், தவறு செய்கிறார். மனம் உடைந்துவிட்டேன், பயமாக இருக்கிறது. அவருக்கு ஏதேனும் ஒன்றால் என்னைத் தான் குற்றம் சொல்ல வருவார்கள், பரவாயில்லை.


இந்த ஒரு வருடம் அவர் என்னைச் சந்தித்தது, என்னை அவர் சந்தித்ததும் ஒரு காரணமாகத்தான் என எடுத்துக் கொள்கிறேன். என் காதல் உண்மை, தோற்றுவிட்டேன். திருமணத்தின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்தது. ஆனால் எனக்கு அமையவில்லை. என் வாழ்க்கை தொடரும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.