தமிழ் சினிமாவின் பெருமிதங்களில் ஒன்றாக நடிகர் வடிவேலுவைக் குறிப்பிடலாம். உலக அளவில் என்ன நடந்தாலும் அதனை வடிவேலு மீமாக மாற்றும்  ஜென்Z  நாகரிகம் உருவாகும் அளவுக்கு அவரது நகைச்சுவையின் தாக்கம் 2K கிட்ஸ்கள் வரை பரவியுள்ளது. இருந்தாலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தது தொடங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட வடிவேலுவுக்கு திரையுலக வாய்ப்பு மொத்தமும் பறிபோனது எனலாம். அண்மையில் இம்சை அரசன் 24ம் புலிகேசி வழியாக மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் சங்கருடன் ஏற்பட்ட மோதலால் அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. தற்போது அந்தத் திரைப்படமும் 4 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையேதான் வடிவேலும் மீண்டும் திரையில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்தது. ஓ.டி.டி., ஊடகம் ஒன்று அதன் நகைச்சுவை நிகழ்ச்சியில் வடிவேலுவை தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  


தெலுங்கு ஓடிடி தளமான ’ஆஹா’ வடிவேலுவை தங்கள் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின்  ஓடிடி தளமான ஆஹா தமிழில் கால்பதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகதான் நடிகர் வடிவேலுவை தனது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. முதலில் திரையே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த வடிவேலுவை எப்படியோ மனது மாற்றி தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக அந்த நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் வைகைப்புயல் மையம் கொள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். 


முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த வடிவேலு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம்  வழங்கினார். சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என்று பதிலளித்தார் வடிவேலு. முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய வடிவேலும், ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார் என்றார்.


மேலும் பேசிய அவர், ”நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள். இதையெல்லாம் கேட்டாம் தலை சுற்றுகிறது. ராம்நாடு, ஒரத்தநாடுன்னு இருக்கு.  நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது? இதையெல்லாம் கேட்டால் தலை சுத்துது” என்றார். கொரோனாவை ஒழிக்க அனைவரும் முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்


கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு கடந்த மே 11-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2-வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. 

Also Read: ’கோவிஷீல்ட் கோவேக்சின் கலந்துபோட்டால் அதிகமான பலன்’ : கொரோனாவுக்கு எதிரா ஸ்ட்ராங் பாதுகாப்பு - ICMR