தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் வடிவேலுவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்பட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். வடிவேலுவின் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் தெறிக்கவிட்டு நெட்டிசன்கள் வடிவேலுவை கொண்டாடி தீர்த்தனர்.  #HBDVadivelu என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் சுராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் வடிவேலு தனக்கே உரிய பாணியில் சூப்பரான பாடி லேங்கஜ்ல போஸ் கொடுத்துள்ளார்.


 






கடந்தாண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பல பிரச்னைகளால், சினிமாவில் சரியாக தோன்றாத இருந்த வடிவேலுவின் அனைத்து பிரச்னைகளும் சமீபத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ‘நாய்சேகர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார் வடிவேலு. இந்தப்படத்தை சுராஜ் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.


இந்த படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசினார்.  அப்போது மிகவும் உருக்கமாக பேசினார். குறிப்பாக தான் பலரையும் சிரிக்க வைத்தாலும், பெரிய மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதற்கு ஒரு குட்டிக்கதையையும் அவர் கூறினார். 


''ஒரு நோயாளி டாக்டரிம் போய் ஐயா, எனக்கு மனசே சரியில்லை. தூக்கம் இல்லை. எனக்கு எதாவது ஒரு மருத்துவம் பண்ணுங்கனு கேட்டு இருக்கார். அதுக்கு அந்த டாக்டர், இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் திங்கள்கிழமை வாங்க. நான்  மருத்துவம் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நோயாளி, இல்லைங்க எனக்கு இப்போதுதான் ரெஸ்ட், உண்மையிலேயே எனக்கு மனசு சரி இல்லை. நிம்மதி இல்லை. மருத்துவம் தாங்க என்றார். அதற்கு பதிலளித்த டாக்டர், அப்படியென்றால் ஒன்று செய்யுங்க, பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அங்கே ஒரு பஃபூன் பிரமாதமாக காமெடி பண்றார். அந்த சர்க்கஸ நாம் பார்ப்போம். அந்த காமெடியை பார்த்த உங்க மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கிடும். அதற்கு பின் எளிதாக மருத்துவம் பார்க்கலாம் என்றுள்ளார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த நோயாளி கூறியுள்ளார், அந்த பஃபூனே நான் தான் என்றுள்ளார். அந்த வாழ்க்கையைத் தான் நான் வாழ்ந்தேன் என்றார்''


இயக்குனர் ஷங்கர் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஷங்கர் படத்தில் இனி நடிக்க மாட்டேன். இனி அந்த பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையில் மீண்டும் நடிக்க இருப்பது குறித்தும் அவர் பேசினார்.