சூர்யா 44


நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே , ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள் . சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் தொடங்கியது.  40 நாட்கள் படப்பிடிப்பிற்கு பின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்டமாக நீலகிரியில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. 


சூர்யா 44 படப்பிடிப்பில் சவால்கள்


படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சவால்களை படக்குழு எதிர்கொண்டு வருகிறது. நீலகிரியில் படப்பிடிப்பு நடந்தபோது நடிகர் சூர்யா தலையில் சின்ன காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் படப்பிடிப்பிற்கு திரும்பினார். அடுத்தபடியாக முறையான அனுமதி பெறாமல் படத்தில் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களை நடிக்க வைத்ததாக படக்குழு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த சவால்களை எல்லாம் கடந்து தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. 


கேரளாவில் சூர்யா 44 படப்பிடிப்பு


தற்போது அடுத்தகட்டமாக சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இடுக்கியில் உள்ள தொடபுழா என்கிற ஊரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ரஜினி, கமல் , விஜய்க்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சூர்யாவை காண அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றனர். அவர்களுடன் சூர்யா செல்ஃபீ எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 






கங்குவா


சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் திஷா பதானி , யோகிபாபு , பாபி தியோல், கருணாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் அதே நாளில் வெளியாகும் காரணத்தினால் கங்குவா ரிலீஸை படக்குழு ஒத்திவைத்திருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்கள். கங்குவா திரைப்படம் வெளியானால் மிகப்பெரிய பான் இந்திய வெற்றிபெறும் என்று படக்குழு உட்பட ரசிகர்களும் உறுதியாக நம்புகிறார்கள்.