சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் அதிரடிகாட்டி வரும் அவருக்கு, இப்போது ’டாக்டர்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.


இன்று, ஒரு மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போது அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் சிவகார்த்திகேயன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. கனா திரைப்படத்தில், “வாயாடி பெத்த புள்ள” என்ற பாடலை பாடியதன் மூலம் ஆராதனா பிரபலமானார்.


இந்நிலையில், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை, சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






“18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என பதிவிட்டுள்ளார். 






சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்கள்  தயார் நிலையில் உள்ளன.கடந்த மார்ச்  மாதம் வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம், சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு. கடந்த மே மாதம் 11 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், படம் வெளியிடப்படாமல் முடங்கி போனது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் படம் மீண்டும் திரையரங்கம் திறந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓடிடியில் வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், தமிழ், மலையாளம்,தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது


இதனை தொடர்ந்து, அயலான் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இதற்கடுத்ததாக சிவகார்த்திகேயன் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ”டான்” திரைப்படத்தை தயாரித்து வருகின்றன. இது தவிர சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அடுத்தடுத்து சிவகார்த்தியேயனின் படங்கள் வெளியாக காத்திருப்பதால், ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.