Sivakarthikeyan: அயலான் படம் ரிலீசாக வேண்டும் என்ற காரணத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

 

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் அயலான் படம் திரைக்கு வரத் தயாராகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகிபாபு, கருணாகரன் எனப் பலர் நடித்துள்ளனர். ஏலியன் ஜானரில் உருவான அயலான் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் புதுவிதமான முயற்சியாக அயலான் படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார். அதில், அயலான் படத்திற்காக சம்பளம் வாங்கவில்லையா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “சம்பளம் வேணுமா, இல்லை படம் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. இது ஒரு மிஷன். குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படம் எடுப்பது முடியாத காரியம். நாங்கள் இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது பான் இந்தியா என்ற வார்த்தை இல்லை. 

 

அப்போது பாகுபலி 1 ரிலீசாகி இருந்தது. அதன்பிறகு தான் பாகுபலி 2, கேஜிஎஃப் இப்போது வரும் படங்கள் எல்லாம் பான் இந்தியாவாக எடுக்கப்பட்டது. தமிழில் ஏன் இப்படி ஒரு படம் பண்ணவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்காக இந்தப் படத்தை எடுத்தே ஆகனும் என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால், படத்தை எடுப்பதில் தயாரிப்பாளருக்கு பணச் சிக்கல் ஏற்பட்டது. படம் ரிலீசாக வேண்டும் என்றால் நான் சம்பளம் வாங்க முடியாது என்பது தான் ஒரே வழியாக இருந்தது. அதனால் படத்தை ரிலீஸ் செய்ய சொன்னேன். எனக்கு சம்பளம் வேண்டாம் என்றேன்” எனக் கூறியுள்ளார். 

 

தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “5 ஆண்டுகளுக்கு முன்பு படம் எடுக்க தொடங்கினோம். அப்போது எனது மகள் 4 வயது குழந்தையாக இருந்தார். அவருக்கு படத்தில் ஏலியன் வரும் ஸ்கெட் மற்றும் ஓவியங்களை காட்டுவேன். அதைப் பார்த்து குழந்தை பயப்படவில்லை. அதனால், அயலான் படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. படத்தை பார்த்து குழந்தைகள் பயப்பட கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்” என்றார். 

 

படத்தில் நடித்தவர்கள் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “கருணாகரன், யோகிபாபுவுடன் இருந்தால் படக்குழுவே சிரிப்பாக இருக்கும். அங்கு நாங்கள் பேசி இருப்பதை கூறினால் வீட்டிற்குள் சண்டை வந்துவிடும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர் 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கினாலும், கொரோனாவால் படப்பிடிப்பு பாதியில் நின்று மீண்டும் தொடங்கியது என்றார்.

 

ஏலியன் சென்னைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற கதையில் தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்தியாவில் முதல்முறையாக லைவ் அனிமேஷனில் அயலான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தில் 4500 கிராஃபிக்ஸ் பயன்படுத்தியுள்ளோம் என்றும், படத்தில் புகைபழக்கம், வன்முறை, பாலியல் சீண்டல் என எந்த ஒரு காட்சிகளும் இடம்பெறவில்லை என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற புது கதைகளை தேர்வு செய்து நடிக்கும்போது எந்தவித பயமும் இல்லாம துணிச்சலாக நடித்து வருவதாகவும், கமர்ஷியல் படங்களை செய்யும் போது மட்டும் அதிக கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.