செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 2452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி ,யானை, கரடி, ஒட்டகச் சிவங்கி ,நீர்நாய், வெள்ளைப் புலி ,காண்டாமிருகம், காட்டெருமை மற்றும் பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதால் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் இது உள்ளது. பூங்காவின் செலவினங்களை குறைப்பதற்காக, விலங்குகளை பராமரிப்பதற்காக விலங்குகளை தடுப்பதற்காக பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள ‘விஷ்ணு’என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் ஆறு மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். ஏற்கனவே 2018, 2020 ஆம் ஆண்டுகளில் அணு எனும் வெள்ளை புலியை தத்தெடுத்து விலங்குகள் மீதுள்ள அக்கரையை வெளிப்படுத்தினார் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. பார்வையாளாராக வந்து விலங்குகளை, பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக இப்பூங்கா விலங்கு தத்தெடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.


இதன்மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80G-க்கான ரசீது மற்றும் பூங்காவினை இலவசமாக சுர்றுப்பார்ப்பது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா நிர்வாகத்திற்கும் மற்றும் இங்குள்ள விலங்குகளின் நல்வாழ்விற்க்கும் விலங்குகளை தத்தெடுப்பதின் மூலம் இத்திட்டத்தின் வழியாக ஆதரவு தருகிறீர்கள்.


இந்த சந்தர்ப்பத்தின் மூலமாக தனிநபரான நீங்கள் விலங்குகளின் பாதுகாவலராக ஆகிறீர்கள், தத்தெடுப்பு ஆதரவு என்பது பூங்காவிலுள்ள வனவிலங்குகளின் உயர்நிலை பாதுகாப்பாகும். விலங்குகளை தத்தெடுப்பதின் மூலமாக தனிமனிதற்கு விலங்குகளின் பாதுகாப்பின் பங்களிப்பு அவசியத்தை பற்றி உங்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தெரியவரும். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பூங்காவிலுள்ள ‘விஷ்ணு’என்ற ஆண் சிங்கத்தையையும், ‘பிரகுர்த்தி’ என்ற பெண் யானையையும் ஆறு மாத காலத்திற்கு தத்தெடுப்பு செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.


இது அவருடைய விலங்குகளின் மீதான அக்கறை மற்றும் ஆர்வத்தை அடையாளப்படுத்துகிறது. சிங்கம் மற்றும் யானையை தத்தெடுத்ததின் மூலமாக அவர் சிங்கங்கள் மற்றும் யானைகளின் பாதுகாப்பிற்காக பெரும் அளவில் குரல் கொடுத்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் அவர்கள் ‘அனு’ என்ற வெள்ளைப்புலியை 2018-2020 ஆண்டுகளில் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X