‘லால் சிங் சத்தா’(Laal Singh Chaddha) படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படம் குறித்தான தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan) பேசும் போது, “ லால் சிங் சத்தா படம் மனிதத்தின் மதிப்பையும், பாசிட்டிவான விஷயத்தையும் பற்றி பேசும். உறவுகள், மனிதநேயம், அன்பு உள்ளிட்ட பலவற்றை பற்றி படம் பேசுகிறது. இன்றைய உலகத்தில் இது போன்ற விஷயங்களை பற்றி பேசுகிற படம் அவசியம். நாம் துவண்டு இருக்கும் போது சில படங்களை பார்த்து நாம் நம்மை உத்வேகப்படுத்திக்கொள்வோம். அப்படியான சில படங்களில் லால் சிங் சத்தா படம் இருக்கும். அமீர்கான் சார் யூ ஆல் வேஸ் கிரேட்” என்று பேசினார்.
-
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது. அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அமிர்கான் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார் . அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி, ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது.
அவர் பேசிய அந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் அது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகர் அமீர்கான், “ இது போன்ற பாய்காட் பாலிவுட்.. பாய்காட் அமீர்கான்.. பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்குகள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. காரணம், ஏராளமானோரின் இதயங்கள் எனக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை.
நாட்டை நேசிக்கிறேன்
நான் உண்மையில் இந்த நாட்டை நேசிக்கிறேன். நான் அப்படித்தான். சிலர் அப்படி உணர்ந்தால் அது துர்திஷ்டவசமானது. மேலும் தனது ரசிகர்களிடமும், பார்வையாளர்களையும் கேட்டுக்கொண்ட அமீர்கான், “ ஆனால் அது அப்படி இல்லை என்றும் தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் தயவு செய்து என் படங்களை பாருங்கள்” என்று பேசினார்.