விஜய் சேதுபதி இத்தகைய உயரத்தில் இருக்க அவரது நல்ல மனசு தான் காரணம் என நடிகர் சிங்கம் புலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், “விஜய் சேதுபதியுடன் நான் முதன்முதலில் ஆண்டவன் கட்டளை படத்தில் தான் நடித்தேன். அதன்பிறகு கருப்பன் படத்தில் இணைந்தேன். இதனைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் கழித்து மகாராஜா படத்தில் நடித்துள்ளேன். இந்த 7 ஆண்டுகள் இடைவெளி அவருக்கு மிகப்பெரிய உயரத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு இருக்கும் வெற்றி மேடைகளில் எல்லாம் விஜய் சேதுபதி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 50வது படம் ஒரு சில நடிகர்களை தவிர்த்து யாருக்குமே வெற்றி கிடைக்கவில்லை.


ஆனால் விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. நான் ஏன் அவரை பாராட்ட வேண்டும் என்றால் எங்களை நேசிக்கிறவர். அண்ணே வந்துடுங்க என சொன்னால் ஷூட்டிங் சென்று விடுவோம். 6 மணி வரை எனக்கு மகாராஜா ஷூட்டிங் 11 மணிக்கு கும்பகோணத்தில் அடுத்த படத்தோட ஷூட்டிங். நான் ரொம்ப டென்ஷனா இருக்கிறேன். என்னை விடமாட்டேங்குறாங்க என தவித்துப் போனேன். இயக்குநர் 5.30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் முடிச்சி என்னை போங்க என அனுப்பி விட்டார். 


விஜய் சேதுபதி என்னை கூப்பிட்டு போகும்போது, அவனை கூப்பிடுடா என தன்னுடைய உதவியாளரிடம் சொல்கிறார். யார் என பார்த்தால் கேரவனில் இருந்து டிரைவர் ஒருவர் தூங்கி எழுந்திருச்சி வருகிறார். அவர் வந்து கார் எடுக்கையில், நான் நீ எதுக்குடா ஹீரோ கேரவனில் போய் ஏறுன என நான் கேட்டேன். அதற்கு அந்த டிரைவர், “விஜய் சேதுபதி அண்ணன் தான் சாப்பிட்டு சாயந்திரம் 7 மணிக்கு கேரவனில் போய் தூங்கிடு. காலை 7 மணிக்கு அண்ணனை கும்பகோணம் கூட்டிச்செல்ல வேண்டும். நீ முழிச்சிருந்தா கார் ஓட்ட முடியாது” என சொன்னதாக கூறினார்.


அதன்பிறகு தாம்பரம் தாண்டி ஒரு இடத்துல காபி குடித்தோம். நான் பணம் கொடுக்க போனேன். என்னை நிறுத்திய டிரைவர், “அண்ணனை கூப்பிட்டு போய்ட்டு 2 நாட்கள் ஷூட்டிங்கில் இருந்து கூட்டி வரும் வரைக்கும் காசு வாங்கக்கூடாது என சொல்லி 40 ஆயிரம் செலவுக்கு விஜய் சேதுபதி கொடுத்தார்” என சொன்னதும் நெகிழ்ந்து போனேன். சில பேர் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதோடு சரி. நமக்கும் அவர்களுக்குமான உறவு முடிந்து விடும். சிலர் உயரத்தில் இருக்க நல்ல மனசு தான் காரணம்” என சிங்கம் புலி கூறியுள்ளார்.