நடிகர் சிலம்பரசனின் தங்கை இலக்கியா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவர் டி.ராஜேந்தர். இவரது மனைவி முன்னாள் நடிகை உஷா ராஜேந்தர். இந்த தம்பதியினருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற இரு மகன்களும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். தந்தை ராஜேந்தரைப் போலவே சிம்புவும் தன் திறமையால் சிறு வயது முதல் இப்போது வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 






நீண்ட இடைவெளிக்குப் பின் மாநாடு, வெந்து தணிந்தது காடு படம் சிம்புவிக்கு கம்பேக் மட்டுமல்லாமல் மீண்டும் அவருக்கான வெற்றியைப் பெற்று தந்தது. அடுத்ததாக பத்து தல படம் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது. 


இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு சிம்புவின் தங்கையான இலக்கியாவுக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷூக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜேசான் அபி என்ற ஆண் குழந்தை 2017 ஆம் ஆண்டு பிறந்தது. இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சிம்புவின் தம்பி குறளரசனுக்கும், நபீலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் இதற்கு முழுமனதுடன் ஒப்புக்கொண்டதாக டி.ராஜேந்தர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 






இதற்கிடையில் சிம்பு எப்படி திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. அவருக்கு தீவிரமாக பெண் பார்க்கும் வைபவம் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களும் சிம்புவின் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


இந்நிலையில் சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை சிம்பு குடும்பத்தினர் நெருக்கமான உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் தாய்மாமா சிம்புவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.