கவுண்டம்பாளையம்


நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தின் டிரைலர் வெளியானது முதலே படத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் சார்பாக எதிர்ப்பு கிளம்பியது. நாடகக்காதலை தோலுரிக்கிறேன் என்கிற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை தவறாக சித்தரிக்கும் விதமாக இப்படம் இருந்தது. ஓசிக தலைவர் , மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தான் நாடகக்காதல் செய்கிறார்கள் என படத்தில் சாதிய வன்மத்தை வெளிப்படுத்தும் பல கருத்துக்கள் இருந்தன. இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு படத்தின் இயக்குநர் ரஞ்சித் சாமர்த்தியமாக பதில்களைச் சொல்லி நழுவிக் கொண்டார். 


திரையரங்கில் வெளியான கவுண்டம்பாளையம் திரைப்படம் அனைத்து தரப்பு ஆடியன்ஸாலும் பங்கமாக கலாய்க்கப்பட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் மீம் கிரியேட்டர்ஸ் துவைத்து தொங்கவிட்டார்கள். ஜி பே இருக்கா என்று கேட்டால் “ என்கிட்ட சீப்பே இல்லை ஜி பே எப்படி இருக்கும் “ போன்ற படத்தின் வசனங்கள் ட்ரோல் மெட்டிரீயலாக மாறின.


கவுண்டம்பாளையம் ஓடிடி ரிலீஸ்


திரையரங்கில் இருந்து ஒரு சில நாட்களில் வெளியேறிய இப்படத்திற்கு ஓடிடி ரிலீஸ் கிடைக்காமல் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் உல்லாசமாக இருந்து வரும் நிலையில் கவுண்டம்பாளையம் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை எல்லாம் ஓடிடியில் எப்படி வாங்கினார்கள் என்கிற கேள்வி ஒரு பக்கம் ரசிகர்களிடம் இருந்தாலும் இன்னொரு  தரப்பு ரசிகர்கள் படத்தை உடனே பார்க்க படையெடுத்து வருகிறார்கள். படத்தை பார்க்க செல்வது ஆர்வத்தினால் என்று நினைத்துவிட வேண்டாம். மீம்ஸ் போடுவதற்கு புதிதாக ஒரு கண்டெண்ட் சிக்கியிருக்கும் ஆர்வத்தில் அவர்கள் படத்தை பார்க்க செல்கிறார்கள். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.