தனக்கும் நிரோஷாவுக்கும் இடையே காதல் முளைத்த தருணத்தை நேர்காணல் ஒன்றில் நடிகர் ராம்கி தெரிவித்தது மீண்டும் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த ராம்கி மற்றும் நடிகை நிரோஷா ஒருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். சில படங்களில் இணைந்து நடித்த இருவரும் இன்றும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகின்றனர். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்கி, நிரோஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியுள்ளார்.


அதில்,”நிரோஷாவை என்னிடம் அறிமுகம் செய்தபோது அவர் கமலுடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்து வந்தார். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். நிரோஷாவின் பின்னணி என்பது வேற லெவலில் இருந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த அவரை செந்தூரப்பூவே படத்தில் ஹீரோயினாக போடலாம் என சொன்னார்கள். ஆனால் நான், ‘இவங்க வேண்டாம். நல்ல பொண்ணா நான் சொல்றேன்’ என சொன்னேன்.


ஆனால் ஆபாவணன் இது ஓகே சாமி என சொல்லிவிட்டார். நான் அப்போது மார்க்கெட்டில் பிஸியான நடிகர். பார்ப்பதற்கு சின்ன பிள்ளை மாதிரி இருப்பதால் நிரோஷா வேண்டாம் என சொன்னேன். இதை யாரோ அவரிடம் சொல்லி விட்டார். 


ஷூட்டிங் வரும்போதே முறைத்துக் கொண்டு தான் வந்தார். எனக்கு கெத்து காட்டுறதே பிடிக்காது. நிராஷாவோ எங்களுடன் ஒட்டாமல் கெத்தாக இருந்து கொண்டிருந்தார். ஆனால் நடிப்பில் என்னோட ஸ்பீட் அவருக்கு செட்டாகவில்லை. நான் ரிகர்சல் சரியான பிறகு என்னை நடிக்க அழைத்தால் போதும் என கெத்து காட்ட ஆரம்பிக்க இருவருக்குள்ளும் ஈகோ மோதல் கொளுந்து விட்டு எரிய தொடங்குகிறது. 


என்னை பார்த்து நீயெல்லாம் யாரு, ஊர்ல இருந்து நடிக்க வந்துட்ட, அப்ப நானெல்லாம் என்ன சொல்லுவ, நான் எம்.ஆர்.ராதா பொண்ணுடா என்கிற ரீதியில் தான் அவருக்கு என்மேல கோபம் இருந்துச்சு. என்னிடம் சினிமா பற்றி பேசினால் எங்களுக்குள் கோபம் வந்து விடும். நான் திரைப்பட கல்லூரியில் படித்து விட்டு வந்தவன் தான். இதெல்லாம் சண்டைக்கு ஏற்றிவிடுவதற்காக மட்டும் தான் பேசுவோம். 


அதேசமயம் ஆபாவாணன் படத்தில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். ஒரு சண்டை காட்சியில் ரயிலில் நான் ஓடிப்போய் ஏற வேண்டும். பின்னாடியே நிரோஷா ஓடி வந்து ஏற வேண்டும். ஆனால் அவருக்கு ஓட தெரியவில்லை. இதனால் உள்ளே விழ போனார். நான் கையை பிடித்து தூக்கி விட்டேன். இந்த சம்பவத்தில் நிரோஷாவின் முகமே போயிருக்கும். அவரை வெளியே இழுத்து போட்டால் மயங்கி விழுந்து விட்டார். அந்த காப்பாற்றிய தருணம் மட்டுமல்லாமல், நாங்க நடிச்ச படம் சூப்பர் ஹிட்டான சமயத்தில் தான் காதல் முளைத்தது. 


சிம்ரன் எந்த மாதிரி ஒரு பிஸியான நடிகையாக இருந்தாரோ, அந்த அளவுக்கு அந்த காலக்கட்டத்தில் நிரோஷா இருந்தார். இருவரும் பிஸியாக நடிக்க ஆரம்பித்த சம்பவத்தில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். அப்படி காதல் வந்து விட்டது” என ராம்கி தெரிவித்திருந்தார்.