நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வரும் வேட்டையன் படத்தின் ரிலீஸ் எப்போது என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம்  ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  இதனைத் தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 


இதற்கிடையில் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்திருந்தார். அதேசமயம் ரஜினியின் 170வது படமாக “வேட்டையன்” உருவாகி வருகிறது. இந்த படத்தை ஜெய்பீம் படம் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்ற த.செ.ஞானவேல் இயக்குகிறார். 


லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்‌ஷன், ஜி எம் சுந்தர் என பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 






விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கேரளா, திருநெல்வேலி, சென்னை, மும்பை, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு கதிர் ஒளிப்பதிவு செய்யும் நிலையில் ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணியை மேற்கொண்டு வருகிறார். ஒருபக்கம் வேட்டையன் படப்பிடிப்பு, மறுபுறம் பொதுநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ரஜினி கலந்து கொண்டு வருகிறார். 


இந்நிலையில் இன்றைய தினம் வேட்டையன் பட ரிலீசுக்காக ஹைதராபாத் சென்ற ரஜினி முன்னதாக  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வேட்டையன் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வேட்டையன் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து வேட்டையன் ரிலீஸ் எப்போது இருக்கும் என கேள்வி எழுப்பியதற்கு, படம் ஷூட்டிங் முடிந்த பிறகு தான் அறிவிப்பார்கள் என ரஜினி பதிலளித்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் உடன் தான் இணைவதாக இருக்கும் படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் ரஜினி கூறினார்.