நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான பிரபலம் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


2021 ஆம் ஆண்டு வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும், 2022 ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும்,  சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 






ஜெயிலர்:


கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கை படக்குழு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதுவரை ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் அவரின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை ரசிகர்களுக்கு படக்குழு அறிமுகப்படுத்தியது. இப்படி அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் ஜெயிலர் படம் முடிந்த பிறகு ரஜினி, தனது மூத்த மகள் ஐஸ்வர்யா  இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும், ‘லால் சலாம்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். இதனால் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைந்து முடிக்கப்பட்டு  படமானது மே மாதம் திரைக்கு வர ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்த நிலையில், படக்குழுவினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தனர். 






மலையாள சூப்பர்ஸ்டார்:


இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இருந்து சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலையாள திரையுலகின் Complete Actor என கொண்டாடப்படும் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன்லால் ஜெயிலரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதற்கான படப்பிடிப்பு ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் படம் பக்காவான பேன் இந்தியா படமாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.