நடிகர் ரஜினி திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு  ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக படத்தின் இயக்குநர் விருது விழா ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது டெல்லிக்கு திடீரென்று பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இந்தப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். 


 







முன்னதாக, அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்தின் 169 ஆவது படமான இதை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவது அனைவரும் அறிந்ததே. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் நடந்தது.


 






இது குறித்து பிரபல ஹேர் ஸ்டைல் வடிவமைப்பாளரான ஆலீம் ஹக்கீம் (Aalim Hakim) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு,  “ ரஜினிகாந்துடன் வேலை பார்த்த இந்த நாள் புதுமையாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்தப்படத்தின் காஸ்டிங் டைரக்டராக கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்தல்) பியூஷ் ஜெயின் இயங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக சென்னை எக்ஸ்பிரஸ், மும்பை மிரர், வீரப்பன் உள்ளிட்ட பாலிவுட் படங்களுக்கு காஸ்டிங் டைரக்டராக பணியாற்றி இருக்கிறார். 




இந்தப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருவதால அவர் விலகியதாகவும், அவருக்கு பதிலாக தரமணி வசந்த் ரவி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 


‘பீஸ்ட்’ -ன் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் நெல்சனுக்கு இதில் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற பிரஷ்ஷர். அதனால் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் நெல்சன். 


ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.