மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ராஜேஷ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கன்னி பருவத்திலேயே என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ், தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில்... தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்த்திழுத்தவர். ஹீரோவாக சில படங்களில் மட்டுமே நடித்தாலும், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் என்பதை தாண்டி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஜோதிடம் குறித்து அதிகம் புலமை பெற்றவர். ஜோதிடம் சம்மந்தமாக பல நூல்களையும் எழுதியுள்ளார்.
அரசியல் நாட்டம் கொண்ட ராஜேஷ், ஒரு தொழிலதிபராகவும் அறியப்படுகிறார். இவரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். இவரது மகள் திருமணம் ஆகி கனடாவில் உள்ளார். இந்த நிலையில் தான் ராஜேஷுக்கு நேற்று காலை திடீர் என மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ராஜேஷின் மகன் தீபக்கிற்கு வரும் ஜூன் 6ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது . சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தீபக் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் . மேலும் தன்னுடைய மகன் நிச்சயதார்தத்தையே மிகவும் பிரமாண்டமாக நடத்த ராஜேஷ் திட்டமிட்ட நிலையில், அவரது ஆசை நிறைவேறுவதற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.