Actor Rahman: செய்தி பார்ப்பது இல்லை.. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கு.. பாலிவுட் என்ட்ரி.. மனம் திறந்த நடிகர் ரகுமான்!

இந்தியில் நடிகர் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கணபத்’ எனும் திரைப்படம், வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

80கள் தொடங்கி தென்னிந்திய சினிமாக்களில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரகுமான். 1983ஆம் ஆண்டு ‘கூடெவிடே’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரகுமான், திரையுலகில் தனது 40வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். கோலிவுட்டில் புதுப்புது அர்த்தங்கள் படம் மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்ற ரகுமான் கிட்டத்தட்ட தனது திரையுலக வாழ்க்கையில் 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.

Continues below advertisement

தற்போது தமிழ், மலையாளத்தையும் தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார் ரகுமான். இந்தியில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கண்பத்’ எனும் திரைப்படம், வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமிதாப்பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், டைகர் ஷெராஃப், கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். விகாஸ் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்தும் தனது திரையுலகப் பயணம் குறித்தும் அடுத்தடுத்த தனது படங்கள் குறித்தும் நடிகர் ரகுமான் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“1983இல் பள்ளித் தேர்வை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்த நேரம் என்னை அழைத்துச்செல்ல வந்த பெற்றோருடன் கூடவே மலையாள இயக்குநர் ஒருவரும் வந்தார். “சினிமாவில் நடிக்கிறாயா” என கேட்டார். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான், நான் சினிமாவில் நடிப்பது போல ஒரு கனவு கண்டிருந்தேன். அந்த கனவு நனவான தருணம் போல கூடெவிடே படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததில்லை. எலக்ட்ரானிக் என்ஜினியர் ஆகவேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. அதன்பிறகு நடிப்புதான் உலகம் என மாறியது.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு கிடைத்த வெற்றி, அதில் பங்காற்றிய அனைவருக்கும் சேர்த்து கிடைத்த வெற்றி. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறையினருக்கு இந்தப் படம் ஒரு மிகப்பெரிய வரலாறாக இருக்கும். கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக படம் இயக்கும் எண்ணம் எழுந்தது. எப்போதும் எனக்கு கே.பாலச்சந்தர், பாரதிராஜா பாணியில் தான் எண்ணங்கள் தோன்றும் என்பதால், அதேபோல உணர்வுப் பூர்வமான ஒரு கதையை உருவாக்கினேன், படத்திற்கு கடவுளின் தோட்டம் என்று பெயர் வரும் விதமாக ‘ஈடன் கார்டன்’ என டைட்டில் வைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்து நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. என்னுடைய மனைவியும் கூட, லட்சுமி வீடு தேடி வரும்போது அதை வேண்டாம் என சொல்லிவிட்டு எதற்காக படம் இயக்குகிறீர்கள் என கூறி என் முடிவை மாற்றிவிட்டார். 

“நீங்கள் இன்னும் அப்போது போல இப்போதும் இளமையாகவே இருக்கிறீர்களே” எனும் கேள்விக்கு, “ நல்ல எண்ணங்கள் இருந்தால் வயது ஆகாது என்று சொல்வேன்” என்று சொல்லி சிரித்த ரகுமான் தொடர்ந்து பேசும்போது, “நமக்கு மனரீதியாக எந்த அழுத்தமும் இருக்கக் கூடாது. தேவையற்ற பழக்கங்கள் என்னிடம் இல்லை. குறிப்பாக தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பதே இல்லை. அதனால் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சாப்பாடு கூட எனது தொழிலாகி விட்டதால், அதற்கேற்ற முறையை பின் தொடர்கிறேன். இப்போதெல்லாம் சப்பாத்தி சாப்பிடுவதில்லை. அரிசி சாதம் தான் சாப்பிடுகிறேன்..

90களின் தொடக்கத்திலேயே பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அந்த சமயத்தில் இங்கே தமிழ், மலையாளத்தில் பிசியாக நடித்து வந்தேன். இப்போது மீண்டும் அதற்கான நேரம் வந்திருக்கிறது. கண்பத் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ளேன். இந்தப் படத்தின் இயக்குநர் விகாஸ் பால் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பவர் எனப் பெயர் பெற்றவர். என்னிடம் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது இதில் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்றும், அவரது மகனாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்னதும் மறு யோசனை இன்றி உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டேன். 

நான் சிறுவயதிலிருந்தே பார்த்து அவரது ஸ்டைலை ரசித்து வளர்ந்தவன்.. அமிதாப்பச்சன் ரசிகர்களாகவே தான் எல்லோருமே இருப்பார்கள். அதனால் படப்பிடிப்பின்போது அவரிடம் சென்று நான் உங்கள் ரசிகன் என மற்றவர்கள் சொல்வது போல நானும் சொல்லி அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர் என்னைப் பற்றி சில விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார்.

குறிப்பாக தொண்ணூறுகளில் நான் நடித்த குற்றப்பத்திரிகை திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது குறித்து என்னிடம் கேட்டு அந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதா என தெரிந்து கொண்டார். அந்தப் படத்தின் ரிலீஸூக்காக அப்போது அவரும் தன்னுடைய பங்குக்கு முயற்சி செய்தார் என்பதையும் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன். எனக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், நசீர், மது போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் ஏற்கனவே அமைந்தது, அந்த வரிசையில் இப்போது அமிதாப் பச்சனுடனும் நடித்து விட்டேன்” எனப் பேசியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola