மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பலரும் அவர் குறித்த நினைவுகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 


விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் சிரிச்சா போச்சு எபிசோடில் இவர் கலந்து கொண்டதை பார்ப்பதற்கே அவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கும். வடிவேலுவை நகைச்சுவையில் பின்பற்றிய பாலாஜி, அவரைப் போலவே உடல் மொழியிலும் தன்னை வெளிப்படுத்துவார். சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித் திரையிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார். 






இப்படிப்பட்ட வடிவேல் பாலாஜி கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் செப்டம்பர் 10 ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. 45 வயதான வடிவேல் பாலாஜிக்கு இறப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இரு கைகளும் வாதத்தால் முடங்கியது.முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், பின் போதிய வசதி இல்லாத காரணத்தால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். 


இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காமெடி நடிகரான புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை. எப்பவுமே எங்களுடன் நீ இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே... இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ மாமா...” என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் புகழுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 






முன்னதாக வடிவேல் பாலாஜி மீது புகழ் அளவுக்கடந்த அன்பை வைத்துள்ள நிலையில் இதனை பல இடங்களில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் கூட தனது காதலியை திருமணம் செய்த புகழ் வடிவேல் பாலாஜி போட்டோவை வணங்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ”இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா...உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா...” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.