சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படம் இன்னும் 6 நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது. தமிழகத்தில் இருப்பவர்களுக்கு முன்பு கேரளா மற்றும் கர்நாடாகவில் இருக்கும் ரசிகர்கள் கூலி படத்தை பார்த்துவிடுவார்கள். கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. கேரளாவில் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவன்கியது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 2023ம் ஆண்டு துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த அஜித் குமார் ரசிகர் இறந்ததை அடுத்தே அதிகாலை காட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது மாநில அரசு. அதன் பிறகே முதல் காட்சி 9 மணிக்கு என்று முடிவானது.
ரஜினிகாந்த் நடிக்க வந்து 50 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக கூலி படத்தில் ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு டைட்டில் கார்டை போடுகிறார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் ரசிகனாக இருந்தாலும் தலைவருக்காக இப்படியொரு விஷயம் செய்ததற்கு நன்றி என்று லோகேஷ் கனகராஜுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். கூலி படத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இதுவரை லோகேஷ் எதுவுமே சொல்லவில்லை. அப்படி இருந்துமே ரஜினிகாந்த் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு ஒரு வகையில் காரணமாகிவிட்டார் நாகர்ஜுனா.
கூலி படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்று அவர் சொன்னதை பிடித்துக் கொண்டார்கள் ரசிகர்கள். கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா. கதாபாத்திரம் குறித்து கேள்விப்பட்டதும் இது ரஜினி சாருக்கு தெரியும் தானே என்று லோகேஷ் கனகராஜிடம் வியந்து கேட்டிருக்கிறார். ரஜினி சாருக்கு உங்கள் கதாபாத்திரம் பற்றி தெரியும் என லோகேஷ் சொன்னதை கேட்டு இம்பிரஸ்ஸாகிவிட்டாராம் நாகர்ஜுனா. தனக்கு நிகரான கதாபாத்திரம் வைக்க ரஜினிகாந்த் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது தான் நாகர்ஜுனாவை நெகிழ வைத்துவிட்டது. வேறு ஒரு நடிகர் அதுவும் தான் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க எத்தனை பேர் ஒப்புக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
அப்படி இருக்கும்போது ரஜினியோ யார் நடித்தாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று நாகர்ஜுனாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைக்க சம்மதித்தது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கூலி படத்துடன் வார் 2 பாலிவுட் படம் வருகிறதே என்று முன்பு வியந்து பேசப்பட்டது. ஆனால் டிக்கெட் முன்பதிவில் ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் படத்தால் கூலிக்கு பக்கத்தில் கூட வரமுடியவில்லை. அதே சமயம் ரிலீஸுக்கு பிறகு வார் 2 படத்தின் வசூல் சூடுபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவில் படுவேகம் காட்டியிருக்கும் கூலி படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக ரூ. 100 கோடியை தாண்டும் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. ரஜினியின் கெரியரில் மிகப் பெரிய ஓபனிங் பெற்ற படமாக கூலி மாறும் என்று நம்பப்படுகிறது. மேலும் ரூ. 1000 கோடி வசூல் எல்லாம் கூலிக்கு கடினமாக இருக்கவே இருக்காது என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.