நடிகர் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் முத்துக்காளை கருத்து தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். சுராஜ் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால் காமெடி காட்சிகள் எதுவும் கைக்கொடுக்காததால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியடைந்தது.






இதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஓடிடி ரிலீஸாக வெளியானது. இதனிடையே வடிவேலுடன் காமெடி காட்சிகளில் தோன்றி பிரபலமானவர்களில் நடிகர் முத்துக்காளையும் ஒருவர். இவர் திருவாரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வடிவேலு தன்னுடன் நடிப்பவர்களை வளர விடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு கூறுகிறார்களே? என்ற கேள்வியெழுப்பப்பட்டது. 


அதற்கு நானே அப்படி சொல்லிருக்கேன். இது இன்றைக்கு, நேற்றைக்கு நடப்பது இல்லை. என்.எஸ்.கே, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, செந்தில் காலத்தில் இருந்தே நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. அதில் வடிவேலு மட்டும் என்ன விதிவிலக்கா என முத்துக்காளை கூறினார். தன்னை மாதிரி இன்னொருத்தங்க அந்த இடத்துக்கு வந்துட்டா, அப்ப தன்னோட இடம் போயிடும் இல்லையா.. அதனால தன்னோட இடத்துக்கு அடுத்தவங்க வராம பார்த்து கொள்வதில் வடிவேலு உட்பட அனைவருமே தெளிவாக இருப்பதாகவும், நமக்கு திறமை இருந்தா அடிச்சி போய்கிட்டே இருக்க வேண்டியது தான் என அவர் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டராக ஆக வேண்டும் என விருப்பப்பட்ட தன்னை காலத்தின் கட்டாயம் நகைச்சுவை நடிகராக மாற்றியது. இருந்தாலும் நான் ஒரு படம் இயக்கும் போது நானே ஸ்டண்ட் காட்சிகளை அமைப்பேன் என முத்துக்காளை கூறினார். 



இதனையடுத்து அவரிடம் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தோல்வியடைய என்ன காரணம் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இதுக்கு பல பேர் காரணம் சொல்லிட்டாங்க. நான், “விதி சரியாக தன் வேலையே செய்தது” என சொல்வேன். காரணம் நாங்க வடிவேலு கூட நடிக்கும் போது, அவர் நல்லா வர வேண்டும். அந்த காட்சி சிறப்பாக வரவேண்டும் என நினைத்து நடிப்போம். 


இப்ப உள்ளவங்க தான் நல்லா வரணும் என நினைத்து தான் வடிவேலுவுடன் நடித்தார்கள். அதுவே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். அதனை தவிர்த்து நாம நடிச்சது, எடுத்த படத்தை தான் மக்கள் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இப்போது இல்லை. யாரா இருந்தாலும் தூக்கி எறியக்கூடிய மக்கள் நல்லதை மட்டுமே ரசிக்கிறார்கள்.