விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன்


இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். மேகா ஆகாஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிருத்வி, சரத்குமார், சரண்யா பொண்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருப்பதையொட்டி சென்னையில் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் விஜய் ஆண்டனி.


இனி மற்ற படங்களில் இசையமைப்பேன்


பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்து வந்த விஜய் ஆண்டனி நடிக்க வந்ததற்குப் பிறகு படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் "ஆமாம் நான் நடிக்க வந்த பிறகு மற்ற படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது. இந்த வருடத்தில் இறுதியில் இருந்து மற்ற படங்களுக்கும் இசையமைக்கலாம் என்றிருக்கிறேன்" என்று கூறினார்.


இளையராஜா பற்றி விஜய் ஆண்டனி






இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான சர்ச்சையைப் பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார். “ராஜா சாரின் கம்பெனியில் உள்ள பாடல்களுக்கு அவர் தான் உரிமையாளர். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பொறுத்தவரை படக்குழுவினர் இளையராஜாவிடம் கேட்டிருக்கலாம். படம் வெற்றிபெற்றபோது கமலை சந்தித்தது போல் அவரையும் சந்தித்திருந்தால் இந்த அளவிற்கு இந்த பிரச்சனை சென்றிருக்காது என நினைக்கிறேன்.


இளையராஜா சொந்தமாக எக்கோ என்கிற கம்பெனியை வைத்திருந்தார். தனது நண்பரின் பெயரில் இந்த கம்பெனியை அவர் நடத்தி வந்தார். ஆனால் அதில் உண்மையாக என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. தன்னிடம் உரிமையுள்ள பாடல்களுக்கு மட்டும்தான் அவர் ராயடி கேட்கிறார் என நினைக்கிறேன். என்னுடைய கொலை, திமிர் பிடிச்சவன் ஆகிய படங்களுக்கான இசைக்கான காப்புரிமை என்னிடம் தான் உள்ளது. அதை பயன்படுத்த நினைப்பவர்கள் என்னிடம் வந்து அனுமதி கேட்கலாம்" என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.