பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் முகேஷ் 


ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகியதைத் தொடர்ந்து கேரள நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மலையாள நடிகர் மற்றும் அரசியல்வாதியான முகேஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் குற்றம்சாட்டினார்.


முகேஷுடன் சேர்த்து இயக்குநர் ரஞ்சித் , ஜெயசூர்யா , இடவேல பாபு  உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அண்மைக்காலத் தகவலின் படி  நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அரசியலை விட்டு விலகி இருக்கும்படி கேரள மார்க்ஸிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 


முகேஷ் பற்றி முன்னாள் மனைவி சரிதா


 இச்சூழலில் நடிகர் முகேஷ் பற்றி அவரது முன்னாள் மனைவி  நடிகை சரிதாவின் நேர்காணல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  சரிதா மற்றும் முகேஷிற்கு 1988 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். தங்கள் விவாகரத்தைத் தொடர்ந்து  தனது முன்னாள் கணவர் முகேஷ் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார். 


தனது திருமண வாழ்க்கை முழுக்க முழுக்க கொடுமைகளால் நிறைந்திருந்ததை சரிதா இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.  ”நான் கர்ப்பிணியாக இருந்தபோது முகேஷ் என் வயிற்றில் காலால் உதைத்து என்னை தள்ளிவிட்டார். வலியில் நான் அழுததைப் பார்த்து நீ நல்லாவே நடிக்கிறாய் என்று அவர் சொன்னார். அவர் என்னை கொடுமைப்படுத்தியபோதும் என்னுடைய மாமனாருக்காக நான் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். ஒவ்வொரு முறையும் என்னை ஏதோ ஒரு வகையில் காயப்படுத்திக் கொண்டே இருந்தார் முகேஷ். ஒரு முறை நான் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தபோது நான் காரில் ஏறச் சென்றேன். அப்போது வேண்டுமென்றே காரை முன்னும் பின்னுமாக நகர்த்தி என்னை ஏறவிடாமல் செய்தார். நான் கீழே விழுந்து அங்கேயே உட்கார்ந்து அழத் தொடங்கினேன். இன்னொரு நாள் குடித்துவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்ததைக் கேட்டபோது என் தலைமுடியை பிடித்து தரையில் போட்டு அடித்தார். 


எங்கள் விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்றால் மற்ற பெண்களுடன் அவருக்கு இருந்த உறவுதான். ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தது மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வெளியிடுவோம். ஆனால் திருமண வாழ்க்கையில் இருந்தபோதே அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது. தனது தவறுகளை எல்லாம் உணர்ந்து அவர் திருந்துவார் என்று நான் எதிர்பார்த்தேன்” என சரிதா தெரிவித்துள்ளார்.