தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ஆம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது தமிழ் திரையுலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


மயில்சாமி உயிரிழந்து ஒரு மாதம் கடந்த பின்னரும் இந்த அதிர்ச்சியில் இருந்து தமிழ் திரையுலகினர் பலரும் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், முன்னதாக மயில்சாமி இறுதியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னதாக மயில்சாமி குறித்து அவரது மகன் நினைவுகூர்ந்தது கவனமீர்த்துள்ளது.


தமிழ் சினிமாவில் மிமிக்ரி கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கிய மயில்சாமி, படிப்படியாக வளர்ந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த சூழலில், பிப்ரவரி 19ஆம் தேதி தன் 57 வயதில்  மாரடைப்பால் உயிரிழந்தார்.


அவரது இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல், அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில், மயில்சாமி நடித்த கிளாஸ்மேட்ஸ் பட பாடல் வெளியீட்டு விழாவில், தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் செந்தில் மற்றும் மயில்சாமியின் மகன்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 


இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணு முன்னே’ எனும் பாடல் வெளியான நிலையில், மயில்சாமியின் மகன்கள் அன்பு, யுவன் இருவரும் கலந்து கொண்டு பேசியதாவது: 


 “அப்பா எங்களை நண்பர்களைப் போல் தான் எப்போதும் நடத்துவார். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கூறுவார். அவர் பிறருக்கு உதவுவதை நிறுத்தியதே இல்லை. 


எம்ஜிஆர் தான் அவருக்கு ரோல் மாடல். என் அப்பா மயில்சாமி உதவி செய்ததைப் பார்த்து தான் நாங்கள் எம்ஜிஆர் குறித்து தெரிந்துகொண்டோம். என் அப்பா கையில் பணம் இல்லாத நேரம் யாராவது உதவி கேட்டு வந்தால் ஆண்டவனிடம் சண்டை போடுவார். நாங்கள் இருவரும் நல்ல நடிகர்களாக வருவதை அப்பா பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுநடக்கவில்லை” என மயில்சாமியின் மூத்த மகனும் நடிகருமான அன்பு பேசினார். 


மேலும் மயில்சாமிக்கு நெருங்கியவரான சக்தி என்பவரை அவரது மகன்கள் விழாவில் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது மயில்சாமி இறுதியாக ஒரு படத்துக்காக ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கியிருந்தார். அதில் 25000 ரூபாயை ஒருவருக்கும் எனக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தார். மீதியிருந்த ஆயிரம் ரூபாயை அவரது மகன்களுக்கு கொடுத்தார். இறுதியாக அவரது சட்டை பாக்கெட்டில் இருந்தது வெறும் 30 ரூபாய் தான் எனக் கண்ணீர்மல்கப் பேசினார். 


மயில்சாமியின் இந்த குணம் பற்றிய பேச்சு இணையத்தில் வைரலாகிவருகிறது.


மேலும் படிக்க: Sam Neill: நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன் - ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் ஜூராசிக் பார்க் நடிகர்.. கவலையில் ரசிகர்கள்!