தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், குணச்சித்திர கதாபாத்திரம், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்டவராக சினிமா மீது சிறு வயது முதலே தீராத காதல் கொண்டவராக திகழ்ந்தவர். 


பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான 'தாவணிக்கனவுகள்' படத்தின் மூலம் திரையில் அறிமுகமான மயில்சாமி சிறு சிறு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தார். நடிகர் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவரின் நண்பர்களில் ஒருவராக கவனம் பெற்றார். அதை தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த்,சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். குறிப்பாக விவேக்,வடிவேலு கூட்டணியில் அவர் செய்த காமெடிகள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். சினிமா மட்டும் இல்லாமல், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர். தோல்வி அடைந்தாலும், அவரது நடவடிக்கைகள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. பிறருக்கு உதவும் மனிதாபிமானியாக அறியப்பட்ட மயில்சாமி, திரைத்துறையில்  படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், திடீரென கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மாரடைப்பால் மயில்சாமி காலமானார். 



மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான மயில்சாமி அவரின் பாணியிலேயே ஏராளமான மக்களுக்கு உதவி செய்த கொடை வள்ளலாக திகழ்ந்தவர். கொரோனா காலகட்டத்தில் கூட வீடு வீடாக உதவி செய்தவர். சமூக பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மனிதரின் இழப்பு அவரின் ரசிகர்களுக்கும் திரையுலகத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


மற்றவர்களைத் தேடி சென்று உதவும் மனப்பான்மை கொண்ட வள்ளல் என அழைக்கப்படும் மயில்சாமி வீட்டின் தற்போதைய நிலை குறித்து வெளியாகும் சில தகவல்கள் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஏனெனில், மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் இருவருமே சினிமா துறையில் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் இருவருக்குமே மயில்சாமி இருக்கும்போதே மிக விமரிசையாக திருமணம் செய்து வைத்து விட்டார். வெகு சில சமாளிக்கக்கூடிய பிரச்சினைகளுடன் சென்றுக் கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென மரணம் தழுவிக் கொள்ள, எல்லாமே குழப்பமானது. தற்போது மறைந்த மயில்சாமியின் வீட்டில், சில  குடும்ப  பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் இந்தப்பிரச்சினைகளால் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத சில தகவல்களை, சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக, அவரது குடும்பத்தினருடன் பேச முயன்ற போது, உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே, பிரச்சினைகள் இருக்கிறதா, இல்லையா என்பதும் தெளிவாகவில்லை. 


மறைந்த நடிகரும் மனிதாபியுமான மயில்சாமியின் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பதே அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனை. மேலும், தீவிர சிவபக்தரான மயில்சாமி இறந்த சில மாதங்களிலேயே அவர் வீட்டில் இப்படி ஒரு பிரச்சனை என சமூக வலைதளங்களில் பரவுவது வருத்தமளிப்பதாக அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் அவர்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.