தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் படங்களில் நடிக்க முடியாமல் போனது தனக்கு வருத்தமாக அமைந்ததாக நடிகர் மதுரை முத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ என்ற ரியாலிட்டி காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் மதுரை முத்து. இவரின் கவுன்ட்டர்கள் ரசிகர்களிடையே  பிரபலம். இதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். 


பட்டிமன்றம், மேடை பேச்சு, குக் வித் கோமாளி என சின்னத்திரையில் ஒரு ரவுண்டு வரும் மதுரை முத்து தமிழ் சினிமாவில் சில படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் அசத்தி வரும் மதுரை முத்து இன்று பலரின் பேவரைட்டான ஸ்டாண்ட் அப் காமெடியனாக உள்ளார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது தொடர்பாக பேசியுள்ளார். 


கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் “ஆடுகளம்” . ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியான இப்படம் 6 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இன்றளவும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த படத்தில் நடிக்க வெற்றிமாறன் அழைத்துள்ளார். மதுரை முத்து வீட்டின் அருகில் தான் இந்த படத்தின்  ஷூட்டிங் நடித்துள்ளது. 


அப்போது இவரை சந்திக்க நினைத்த வெற்றிமாறன், இயக்குநர் துரை செந்தில்குமாரை வைத்து மதுரை முத்துவை அழைத்து வர சொல்லியுள்ளார். உடனே போய் பார்த்தேன். வெற்றிமாறன் பெரிய ஃபைல் ஒன்றை கொடுத்து அதனை மதுரை மொழியில் மாற்றி கொடுக்க சொன்னார். ஆனால் மறுத்து விட்டேன். பின்னர் அப்படம் தேசிய விருது பெற்றபோது எனக்கு வருத்தமாக இருந்தது. 


இதேபோல் சுப்பிரமணியபுரம் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்திலும் என்னை நடிக்க கூப்பிட்டார்கள். அதாவது அப்படத்தை முதலில் விஜய், சூர்யாவை வைத்து எடுக்க முடிவான போது எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்நேரம் வெளிநாட்டில் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டிய நிலை இருந்ததால் மறுத்துவிட்டேன் என நேர்காணலில் மதுரை முத்து கூறியுள்ளார்.