தமிழ் திரையுலகில் ’நான் ஈ’ படத்தின் மூலம் அறிமுகமான கிச்சா சுதீப் மீது மற்றுமொரு பிரபல தயாரிப்பாளர் மோசடி புகார் கூறியுள்ளார். 


நான் ஈ, பாகுபலி, விஜய் நடித்த புலி, முடிஞ்சா இவன பிடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த கிச்சா சுதீப், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர். தமிழ், கன்னடம் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு திரையுலகிலும் கலக்கி வருபவர். நடிப்பு மட்டும் இல்லாமல் கிச்சா சுதீப் தயாரித்த 7 படங்கள் திரைக்கு வந்துள்ளன. நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் கிச்சா சுதீப் கப்சா-2 படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 


இந்த நிலையில் கிச்சா சுதீப் மீது பிரபல கன்னட தயாரிப்பாளர் எம்.என்.குமார் பகிரங்க மோசடி குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் கிச்சா தனது படத்தில் நடிப்பதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இவரை தொடர்ந்து கிச்சா சுதீப் மீது தயாரிப்பாளர் ரஹ்மானும் மோசடி புகார் கூறியுள்ளார். கிச்சா நடிக்க இருந்த இந்தி படத்தில் தான் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ததாகவும், அதில் முன்பணமாக ரூ.5 லட்சம் கிச்சாவுக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அந்த படத்தில் கிச்சா நடிக்காததால் தான் கொடுத்த தொகையில் ரூ.1.80 லட்சத்தை மட்டுமே கிச்சா திரும்ப கொடுத்துள்ளதாகவும், மீதி பணத்தை தரவில்லை என ரஹ்மான் கூறியுள்ளார். தற்போது பண நெருக்கடி இருப்பதால் தனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டு கொண்டுள்ளார்.


மேலும், கிச்சாவுக்கு எதிராகத்தான் எந்த ஒரு புகாரும் கூறவில்லை என்ற ரஹ்மான், கிச்சா சுதீப்பை பார்க்க அவரது வீட்டுக்கு 150 முறை சென்றிருப்பேன். ஆனால், ஒருமுறை கூட என கிச்சா பார்க்கவில்லை என கூறியுள்ளார். தயாரிப்பாளர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கிச்சா சுதீப்,  மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார். தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக தயாரிப்பாளர் எம்.என். குமார் குற்றம்சாட்டி வருவதாகவும், தன் பெயர் கெட்டுப்போனதால் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கிச்சா சுதீப் கேட்டுள்ளார்.


பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மோதலால் கன்னட திரையுலகம் பரபரப்பில் உள்ளது. இதேபோன்று, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மோசடி புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அஜித்குமார் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு படம் நடிக்காமல் ஏமாற்றியதாக கூறி வரும் மாணிக்கம் நாராயணன், அஜித் ஒரு மோசடி மனிதர் என பகிரங்கமாக கூறி வருகிறார்.