வெந்து தனிந்தது காடு படத்தில் சிம்பு ஓட்டலில் முதலில் பாத்திரம் கழுவும் வேலையில் நியமிக்கப்படுவார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற வேலைகளை கவனிக்க முன்னேறுவார். நிஜவாழ்க்கையில் அப்படியொரு கேரக்டராகத் தான் இருந்ததை நினைவு கூர்கிறார் நடிகரும் இசைக்கலைஞருமான கருணாஸ். 






“சொல்லப்போனால் சாப்பாடு கிடைக்காமல் சில நாட்கள் அலைந்திருக்கிறேன். ஆனால் ஓசி சாப்பாடு எப்பவுமே நமக்குச் சரிப்பட்டு வராது. உழைத்துச் சாப்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.அதனால் சாப்பாடு இல்லாத நாட்களில் ஏதாவது ஓட்டலில் போய் வேலை தேடுவேன். போனதுமே அவர்களிடம் எதும் பாத்திரம் கழுவும் வேலை இருக்கா என்றுதான் கேட்பேன். ஏனென்றால் எடுத்ததுமே எதும் வேலை இருக்கா எனக் கேட்டால் என் படிப்பு என்னவென்று கேட்பார்கள். காலேஜ் என்றால் இவன் இந்த வேலைக்குச் சரிப்பட்டு வரமாட்டான் என அவர்களே ஓரங்கட்டி விடுவார்கள். அதனால் எடுத்ததுமே நாமளே பாத்திரம் கழுவற வேலையைக் கேட்டுடறது. ஏனென்றால் வேறு யாரும் அதைச் செய்ய மாட்டார்கள். பாத்திரம் கழுவினாலும் கக்கூஸ் கழுவினாலும் அதைச் சுத்தமாகச்செய்வேன். கடை முதலாளி அடுத்தமுறை என்னக் கூப்பிட்டு லிஃப்ட் ஆப்பரேட் செய்யும் வேலையை பார்க்கச் சொல்லுவார். அவர்களாகவே அப்படி அழைத்து வேலை தருவதில் ஒருவகை அங்கீகாரம் இருக்கிறது. நான் இன்றைக்கு ஒரு ஆளாக வளர்ந்திருப்பதற்கு இந்த உழைத்துச் சாப்பிடும் எண்ணம் எதையும் நீட்டாகச் செய்யும் எண்ணம் முக்கியமானது.” என்கிறார்.


தஞ்சாவூர் மாவட்டம் , பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பிறந்து வளந்தவர் நடிகரும் அரசியல் பிரமுகருமான கருணாஸ். கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான , நந்தா திரைப்படம் மூலம் லொடுக்கு பாண்டியாக சினிமா துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு காதல் அழிவதில்லை , பாபா, வில்லன் , குத்து, பிதமாகன்  என பல படங்களில் காமெடியனாக களம் கண்டிருக்கிறார்.  நடிகராக மட்டுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் , பாடகர் என பன்முக அவதாரம் எடுத்தவர் கருணாஸ். கடந்த  2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்  திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் கருணாஸ்