தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். ஏராளமான ரசிகைகளின் கனவு நாயகனாக கொண்டாடப்பட்ட கார்த்திக் சிறப்பான துறுதுறுப்பான நடிப்புக்கு பெயர் போனவர். காமெடி, சீரியஸ் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் என்பதால் அவர் நவரச நாயகன் என்றே அழைக்கப்பட்டார். 


 



அரசியல் பிரவேசம்:


சினிமா மூலம் பிரபலமான நடிகர்கள் பலரும் அரசியலில் இறங்குவது என்பது காலம்காலமாக நடைபெறும் ஒன்று தான். அப்படி தான் நடிகர் கார்த்திக்கும் ஒரு நடிகராக பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே அரசியலிலும் இறங்கினார். 'அனைத்திந்திய பார்வார்டு பிளாக்' எனும் கட்சி மூலம் அரசியல் பயணத்தை துவங்கி அதன் தமிழக தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் நாடாளும் மக்கள் கட்சியை துவங்கி அதையும் கலைத்துவிட்டு 'மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியை துவங்கி அதில் பெரும் சறுக்கலையும் சந்தித்தார். நடிகராக அவர் ஜெயித்த அளவுக்கு ஒரு அரசியல்வாதியாக ஜொலிக்க முடியவில்லை. 


கார்த்திக் - கவுண்டமணி காம்போ :


நடிகர் கார்த்திக் நடித்த பெரும்பாலான படங்களில் அவரின் மிகப்பெரிய பலமாக உடன் நடித்திருந்தார் நடிகர் கவுண்டமணி. கார்த்திக் - கவுண்டமணி கூட்டணி ஒரு கலக்கலான கூட்டணி. உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி, லக்கிமேன், உனக்காக எல்லாம் உனக்காக, பூவரசன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர்களின் காம்போ பட்டையை கிளப்பியது. 


 



கவுண்டமணியின் ரியாக்ஷன் :


கார்த்திக் அரசியலில் நுழைந்தது குறித்து கவுண்டமணியின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பதை அவரே நேர்காணல் ஒன்றில் மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்து இருந்தார். 


கார்த்திக் அரசியலில் இறங்கிய போது தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அதற்கு பிறகு அவர் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது கார்த்திக்கும் கவுண்டமணியும் சேர்ந்து கேரவனில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர். அப்போது கார்த்திக்கிடம் "என்ன தம்பி சுற்றுப்பயணம் எல்லாம் எப்படி இருந்தது?" என கேட்டு விட்டு உடனே "எதுக்கு?" என அவரின் வழக்கமான நக்கலான பாணியில் கேட்டுள்ளார். 


அரசியல் எப்படி இருக்கும் அதில் என்னென்ன சவால்கள் இருக்கும் என்பதை கவுண்டமணி அண்ணன் ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளார். அதை தான் அவர் அப்படி கேட்டுள்ளார். அவருக்கு என் மீது நிறைய அன்பு இருக்கிறது. எனக்கு அவர் மீது எவ்வளவு அன்பும் மரியாதையும் இருக்கிறதோ அதை விட அதிகமாகவே அவருக்கு ஒரு தம்பியை போல என் மீது அளவு கடந்த பாசமும் அன்பும் உள்ளது என கூறி இருந்தார் நடிகர் கார்த்திக்.