பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடித்தது குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகமெங்கும் ரிலீசானது. மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்பட்ட நிலையில் தொடர் விடுமுறையால் டிக்கெட்டுகள் கிடைக்காமல் ரசிகர்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் பார்த்த ரசிகர்களும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே உலகம் முழுவதும்  பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் ரூ.80 வசூலை எட்டியுள்ளதாக நேற்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.  தற்போது படத்தின் 2 ஆவது நாள் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தத்தகவல்களின் படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாவது நாளில் 150 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் என்ற வீதம் மூன்று நாளுக்கு 30 லட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 






இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. படம் முழுவதும் கார்த்தி மூலம் கதை நகர்வதாக அமைக்கப்பட்டுள்ளதால் முதல் பாகத்தில் கார்த்தியின் பங்கு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் வந்தியத்தேவனாக பயணம் செய்த அனுபவம் தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என தெரிவித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மேலும் அதில் அமரர் கல்கி, இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநர் தோட்டா தரணி. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றி என தெரிவித்துள்ளார். இறுதியாக பொன்னியின் செல்வனை காவியத்தை கொண்டாடும் எனது ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி...நன்றி..நன்றி என கார்த்தி தெரிவித்துள்ளார்.