நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் இருந்து முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘விருமன்’ படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப்படமான பொன்னியின் செல்வன் கடந்த வாரம் வெளியானது. இதில் வந்தியத்தேவன் என்னும் கேரக்டரில் கார்த்தி நடித்திருந்தார். முதல் பாகத்தில் பொன்னியின் செல்வனின் மொத்த கதையும் கார்த்தி வழியாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருந்தால் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 






இதனைத் தொடர்ந்து இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ஸ்பை திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கார்த்தி 6 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.






ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்கள், பிற மொழி டப்பிங் உரிமை என தமிழகம் தவிர்த்த வியாபாரங்களில் சர்தார் படத்திற்கு 64 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் சர்தார் படத்தில் இடம்பெறும் ஏறுமயிலேறி என்னும் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் , “இப்பாடல் நாட்டுப்புற பாடல் என்றும், இதனை வந்தியத்தேவன் பாடுகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.  இதனை கார்த்தியின் ரசிகர்கள் சமூக  வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.