ஜெயம் ரவி


முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  ஜெயம் ரவி  நடிப்பில் சமீபத்தில்  வெளியான படம் இறைவன் மற்றும் சைரன் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகினார் ஜெயம் ரவி, தற்போது ஜீனி , மற்றும் பிரதர் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி


வம்சம் , பசங்க , கேடி பில்லா கில்லாடி ரங்கா , கடைக்குட்டி சிங்கம் , நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல கமர்ஷியல் வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ் . பாண்டிராஜ் படங்கள் என்றாலே குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது . கிராமத்தை பின்னணியாக கொண்ட கதைகள், சரியான அளவு ரோமான்ஸ் , செண்டிமெண்ட் , சின்னதாக மெசேஜ் ஆகியவரை இவரது படங்களின் பலமாக இருக்கின்றன.


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது . இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய தோல்வியை எதிர்கொண்டது, இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்தப் படத்திற்கு தயாராகியுள்ளார் பாண்டிராஜ். முன்னதாக நடிகர் விஷாலுடன் அவர் ஒரு படம் இயக்க இருந்தார் . இந்தப் படத்திற்கான வேலைகள் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போகவே ஜெயம் ரவியுடன் தனது அடுத்தப் படத்தை தொடங்க இருக்கிறார் .






சைரன் படத்தை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் ஜீனி மற்றும் பிரதர் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் ஜூலை மாதத்தில் இப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது , வரும் ஜூம் மாதம் முதல் வாரத்தில் இப்படத்திற்கான அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயம் ரவி மற்றும் பாண்டிராஜ் ஆகிய இருவரின் கடைசி படமும் பெரியளவில் வொர்க் அவுட் ஆகாத நிலையில் இந்த படம் இருவருக்கும் தேவையான வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்