நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்கப்போவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் நடிப்பில் இந்தாண்டு மட்டும் மாறன், தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு படமான கேப்டன் மில்லரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


<






ஏற்கனவே பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல துறைகளில் அசத்தி வரும் தனுஷ் 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் ராஜ்கிரண், ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ்,மடோனா செபாஸ்டியன் கேமியோ ரோலில் வந்து அசத்தினர். விமர்சன ரீதியாக தனுஷின் முயற்சியை பலரும் பாராட்டியிருந்தனர். தொடர்ந்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனுஷோ முழுமையாக நடிப்பில் களமிறங்கினார். 






இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் தனுஷ் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் நானே வருவேன் படத்தின் கதையை தனுஷ் எழுதியிருந்தார். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் யார், யார் நடிப்பார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.