நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement


மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். கடந்தாண்டு ஏப்ரலில் வெளியான கர்ணன் படத்திற்கு பிறகு ஓடிடியில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன், தி க்ரே மேன் ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தியேட்டர்களில் தனுஷ் வெளியிட்டார் . 






அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் சிறப்பாக இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி  பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் ரசிகர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் தனுஷ் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இதில் நானே வருவேன் விரைவில் தியேட்டரில் ரிலீசாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நேற்று முன்தினம் அப்டேட் வெளியிட்டார். 


அதேசமயம் தனுஷ் நடிக்க தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. 






அதாவது வாத்தி திரைப்படத்தை  தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்கான விநியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செல்வன் பெற்றுள்ளதாகவும், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.