தனுஷ்


நடிகர் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் 160 கோடி வசூலித்தது. தனுஷ் இயக்கத்யில் அடுத்தபடியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க இருக்கிறார். இதில் தனது நான்காவது படத்திற்கான படப்பிடிப்பை தனுஷ் சைலண்டாக  தேனியில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்த தனுஷ்


கடந்த ஜூலை மாதம் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனுஷ் தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கிவிட்டு கால் ஷீட் கொடுக்காதது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பின் தனுஷை வைத்து புதிதாக படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தங்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கலந்து ஆலோசிக்கவில்லை என நடிகர் சங்கம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 


நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். அப்போது பெப்ஸி அமைப்பினர் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தராததால் இந்த பிரச்சனை மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. நடிகர் சங்கத்துடன் கலந்து பேசிய தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் மீதான ரெட் கார்டை நீக்கியது. இந்த பிரச்சனையை முடித்து வைத்த நடிகர் சங்கத்திற்கு தனுஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


இயக்கத்தில் கவனம் செலுத்தும் தனுஷ்






ஒரு பக்கம் பிஸியாக நடித்து வந்தாலும் தனுஷ் தற்போது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தேனியை மையப்படுத்திய கதை ஒன்றை அவர் இயக்கி அதில் நடித்தும் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பின் அருண் விஜய் வைத்து தனுஷ் படம் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.