பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


பிரிந்த நட்சத்திர ஜோடி 


தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர்களில் ஒருவராக தனுஷ் திகழ்கிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த அவர், இன்று நடிப்பின் அசுரனாக திகழ்கிறார். நடிகர்,பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாக தனது திறமைகளை நிரூபித்து வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளாக ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 


சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் என்ற பெருமையைப் பெற்ற தனுஷை அன்றைய கோலிவுட் திரையுலகமே வியந்து பார்த்தது. இவ்வளவு ஏன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆச்சரியப்பட்டனர். என்றைக்கும் மாமனாரிடம் நடந்து கொள்வது மாதிரி ரஜினியிடம் தனது அன்பை வெளிப்படுத்தாமல் ஒரு தலைவர் - ரசிகர் என்ற பாணியிலேயே அனைத்து இடங்களிலும் அவருடன் உறவை பேணி வந்தார். 


ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியினர் கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் ஐஸ்வர்யாவும் இயக்குநராக களம் கண்டார். தனுஷை வைத்து “3” படத்தை எடுத்தார். பின்னர் வை ராஜா வை, லால் சலாம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 


விவாகரத்து கோரி மனுதாக்கல் 


இப்படியான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்தனர். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை அறிக்கை ஒன்றின் மூலம் அனைவருக்கும் தெரிவித்தனர். மற்ற நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகுகிறார், பலரின் குடும்பங்களில் பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி வதந்திகள் காட்டுத்தீயாய் பரவியது. கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே ஐஸ்வர்யா தனது மகன்களுடன் ரஜினி வீட்டில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவிப்பு வெளியானது. 


சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்குள் இருவருக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் முயற்சித்தனர். ஆனால் 2 ஆண்டுகாலம் அதற்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது. தனுஷ், ஐஸ்வர்யா தத்தமது பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருந்ததால் கடைசி வரை தீர்வு கிடைக்கவே இல்லை. இந்நிலையில் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004 ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.