பொன்னியின் செல்வன் படம் பார்க்க வித்தியாசமான முறையில் வந்த நடிகர் கூல் சுரேஷின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீசானது. மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்பட்ட நிலையில் முன்னதாக படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். 






எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே பொன்னியின் செல்வன் படம் பார்க்க நடிகர் கூல் சுரேஷ் குதிரையில் வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும், நகையை அடமானம் வைத்து அதனை வாடகைக்கு எடுத்து வந்ததாகவும், உடன் 20 பேரை அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படம் சிறப்பாக வந்தாலும் எல்லா கேரக்டரும் சூப்பராக வந்துள்ளதாக கூல் சுரேஷ் தெரிவித்தார். 


அதேசமயம் தன் தலைவன் சிலம்பரசனுக்கு அடுத்த பாகத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், அவர் எந்த கேரக்டரிலும் சிறப்பாக செட் ஆவார் எனவும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.