பிரபல காமெடி நடிகர் போண்டா மணி கிட்னி செயலிழப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். 


இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1980களில் சிங்கப்பூரில் பணிபுரிந்தபோது ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்த இயக்குநர் பாக்யாராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் சென்னை வந்த அவர், 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 






தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர், நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், வேலாயுதம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிமுகவின் தொண்டராக இருக்கும் போண்டாமணி, தற்போது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் பெஞ்சமின் வீடியோ வெளியிட்டிருந்தார். 


அதில் தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள், அவரின் மேல் சிகிச்சைக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். மேலும் போண்டா மணியும் எனக்கென்று எதுவும் சேர்த்து வைக்கவில்லை. டயாலிசிஸ் அல்லது மாற்று கிட்னி பொறுத்த வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 






இந்நிலையில் போண்டா மணியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். மேலும் போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.