விவேக், மயில்சாமி, மனோபாலா இவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு இந்த நிலை வந்திருக்காது என நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸில் மேனேஜராக பணியாற்றிய லட்சுமணன் ஆனந்தம் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 60 வயதாகும் அவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேசமயம் வீடில்லாமல் நண்பரின் ஹெஸ்ட் ஹவுஸில் சோபாவில் வசித்து வந்த அவரின் நிலை பலரையும் கண் கலங்க வைத்தது.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன், “தங்குவதற்கு வீடில்லாமல் இருந்த எனக்கு அமைச்சர் ராஜ்மோகன் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவருடைய வீட்டை கொடுத்துள்ளார். 2 பெட்ரூம், ஏசி வசதி கொண்ட வீடு நன்றாக உள்ளது. நான் கிட்டதட்ட ஒரு மாதமாக வீடில்லாமல் இருந்தேன். வருமானம் இல்லை என்பதால் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவ்வளவு எளிதில் யாரும் தங்க முடியாது. நான் இந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதைத்தவிர எனக்கு பெரிய தொகை ஒன்றை ராஜ்மோகன் எனக்கு வழங்கினார்.
நான் வீடில்லாமல் தரையில் படுத்து கிடந்ததைப் பார்த்து அவர் கண் கலங்கி விட்டார். என்னுடைய நண்பர் தான் 2 மாதமாக அவருடைய ஹெஸ்ட் ஹவுசில் தங்க வைத்து சாப்பாடு போட்டார். போன் ரீசார்ஜ் செய்யக்கூட என்னிடம் பணம் கிடையாது. இயக்குநர் விக்ரமன் ரூ.50 ஆயிரம் கொடுத்து கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என சொன்னார். அதேபோல் ரஜினிகாந்த் ரூ.1 லட்சம் கொடுத்தார். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் மாதம் மாதம் ரூ.10 ஆயிரம் என் வங்கி கணக்கில் ரஜினிகாந்த் போட சொல்லி கூறியுள்ளார்.
நான் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வீடு கொடுத்ததை அவருடைய உதவியாளரை அழைத்துச் சொன்னேன். ரொம்ப சந்தோசம் என சொல்லி மாதம் மாதம் பணம் தருகிறோம். பைக்கில் எல்லாம் போக வேண்டாம். எங்கு சென்றாலும் ஆட்டோவில் போங்கள். ரஜினிகாந்த் என்ன உதவி என்றாலும் செய்ய சொல்லி கூறியிருப்பதாக அவர் உதவியாளர் என்னிடம் தெரிவித்தார். மனிதன் ஒரு கஷ்டத்தை அனுபவிக்கும்போது தான் கடவுள் நம்மை நல்லா வைத்துக்கொள்ள விரும்புவார். ராஜ்மோகன் என்னை சந்தித்து நான் உங்கள் ரசிகன், உங்கள் காமெடி எல்லாம் பார்த்து ரசித்துள்ளேன் என சொன்னார். எனக்கு சொந்த ஊர் மதுரை. நாங்கள் வசித்து வந்த தெருவே எங்கள் தாத்தா பெயரில் தான் இருந்தது. எல்லாவற்றையும் விற்று விட்டார்.
எங்கள் வீட்டில் மொத்தம் 8 பேர். என் அண்ணன், தம்பி எல்லாரும் கஷ்டப்படுறாங்க. நான் தான் அவர்களுக்கு உதவி செய்தேன். எனக்கு சினிமா அறிமுகமான காலக்கட்டத்தில் இருந்தே குடிப்பழக்கம் இருந்தது. எனக்கு பழக்கத்தை உருவாக்கியவர்கள் நிறுத்தி விட்டார்கள். என்னால் முடியவில்லை. முன்பெல்லாம் ஒரு ஃபுல் குடித்து வந்தேன். இப்போது அந்த வாடை பார்த்தால் குமட்டல் தான் வருகிறது. எனக்கு முதலில் கேபிஒய் பாலா தான் வந்து உதவி செய்தார். அந்த பணத்தை வைத்து தான் 2 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தேன். நான் வடிவேலுவிடம் இதுவரை உதவி கேட்கவில்லை. கேட்டால் கண்டிப்பாக செய்வார். விவேக், மயில்சாமி, மனோபாலா இவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு இந்த நிலை வந்திருக்காது. அடுத்ததாக 2,3 படம் வாய்ப்புகள் வந்துள்ளது.
எனக்கு கமல்ஹாசன் கூட படம் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. இதுவரை முடியவில்லை. சினிமாக்காரனுக்கு பெண் தர மாட்டேன் என சொல்லியதால் நான் இதுவரை கல்யாணம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
