இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் சாதிய எதிர்ப்பு, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை அதிகளவு பேசும் மாநிலமாகவும், கலப்புத் திருமணங்களை அதிகளவு ஊக்குவிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிலும் சாதிய வன்கொடுமைகள் அரங்கேறி வந்தாலும் அதற்கு எதிரான குரலும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
முற்போக்குவாதி வேடம்:
பொதுமக்கள் மத்தியில் அதிகளவு புகழ்பெற்ற திரையுலகினர் பலரும் சாதிய எதிர்ப்புக்குரலை பொதுவெளியில் பல முறை எழுப்பி வருகின்றனர். ஆனால், இவ்வாறு பேசிய பலரும் வெளி மாநில நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போதே அல்லது நேர்காணலில் பங்கேற்கும்போதே சாதி பெருமைகளை பேசி தங்களது போலி முகத்திரையை கிழித்து நிஜ முகத்தை காட்டி விடுகின்றனர்.
சமீபகாலங்களில் தமிழ் சினிமா பிரபலங்களின் பலரின் இதுபோன்ற போலி முகங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. முற்போக்கு சிந்தனைகளை அதிகளவு பேசும் சமூகமாக தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் திரை பிரபலங்கள் பலரும் தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக்கொண்டு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
போஸ் வெங்கட்:
தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் ஒரு முறை தமிழில் அளித்த நேர்காணலில் தனக்கு சாதி பெருமை பேசுவது பிடிக்காது என்றும், தன்னைச் சுற்றியிருப்பவர்களும் தங்களிடம் அதுபோன்று பேசுவது கிடையாது என்றும், தன்னிடம் யாரும் அப்படி பேசமாட்டார்கள் என்றும் கூறியிருப்பார். ஆனால், தெலுங்கில் அளித்த ஒரு நேர்காணலில் அவர் ஆந்திரா, தெலங்கானாவில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்ட தானும் அந்த சமுதாயம்தான் என்றும், ஆனால் தனக்கு தெலுங்கு தெரியாது என்றும் பேசியிருப்பார்.
பாக்யராஜ்:
இவர் மட்டுமின்றி தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவரும், முன்னாள் அரசியல்வாதியுமான பாக்யராஜ் கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் சாதி, மத பேதங்கள் நீங்கி சமத்துவம் தழைப்பதே உண்மையான சுதந்திரம் என்று பேசியிருப்பார். ஆனால், ஆந்திராவில் குறிப்பிட்ட சமுதாய நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்வில் பங்கேற்ற பாக்யராஜ் அந்த சமுதாயத்தினருக்கு தனி மரியாதை உள்ளது, அந்த சமுதாயத்தில் பிறப்பது பெருமை என்று சாதிப் பெருமை பேசியிருப்பார்.
சிக்கிய பார்த்திபன்:
தமிழ் சினிமாவில் கமல்ஹாசனைப் போல வார்த்தைகளால் புதிராக பேசுபவரும், நடிகர், இயக்குனராகிய பார்த்திபன் தற்போது ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண் நடிக்கும் புதிய பட நிகழ்ச்சியில் தான் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சாதிப் பெருமை பேசியிருப்பார்.
இதுபோன்று தமிழ் சினிமாவில் உள்ள பலரும் தாங்கள் தமிழ் ரசிகர்களால் வளரும் வரை, புகழைப் பெறும் வரை தங்களை ஒரு முற்போக்கு சிந்தனையாளர்களாகவும், பெரியாரியவாதிகளாகவும் போலி முகத்திரை அணிந்து காட்டிக் கொள்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட புகழை அடைந்த பிறகு தமிழ்நாட்டை கடந்து வேறு ஒரு மாநிலங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது சாதி பெருமை பேசி தங்கள் நிஜ முகத்தை காட்டிக் கொள்கின்றனர். இதுபோன்ற போலி சமத்துவவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
