பெண்களை மையப்படுத்தி வந்த  படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென ஒரு இடத்தினைப்பிடித்துள்ள நடிகை அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் சமூக வலைத்தளங்களில் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


 தேவசேனாவாக  அனைவரின் மனதில் வாழ்ந்து வருபவர் தான் அனுஷ்கா ஷெட்டி. கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னதாக தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில், தனது விடுமுறைக்காலங்களில் யோகா பயிற்சிக்குச் சென்றார். விளையாட்டாக கற்கத்தொடங்கிய  நிலையில் அதன் மீது அதீத ஈடுபாடு கொண்டதால் முறையாக பயிற்சி பெற்று யோகா ஆசிரியராகா பணியாற்றினார்.  இவரது யோகா குரு பரத் தாகூரின்,  மனைவி புகழ்பெற்ற நடிகை பூமிகா என்பதால், அவர்களின் திரையுலக நண்பர் ஈஸ்வர் நிவாஸ் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவிற்கு தேடிவந்தது. ஆரம்பத்தில் நடிப்பதில் விருப்பமில்லாத அனுஷ்கா வந்த வாய்ப்புகளையெல்லாம் வேண்டாம் என்று தட்டிக்கழித்தார். பின்னர் பலரின் அறிவுரையின் பேரில் சினித்துறைக்கு வந்த அனுஷ்கா முதன் முதலாக கடந்த 2005 ஆம் ஆண்டு பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அக்கினேனி நாகார்ஜூனாவுடன் இணைந்து சூப்பர் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றியினைக் கொடுக்கவில்லை என்றாலும், சினிமா வாழ்க்கைக்கு நல்ல துவக்கமாகவே அனுஷ்காவிற்கு அமைந்தது.





இதனையடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் மாதவனுடன் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். படம் அந்தளவிற்கு ரீச் ஆகவில்லை என்றாலும், அக்காலக்கட்டத்திற்கு ஏற்றாற் போல ”மொபைலா, மொபைலா நீ என்ன போஸ்பெடா, ப்ரீபெய்டா சொல்லு” என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல ரீச் கொடுத்தது. இதனையடுத்து பெண்களை மையப்படுத்திய கதைக்களமான அருந்ததி படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையினை வெளிப்படுத்தினார். பின்னர் தமிழில்  சிங்கம், என்னை அறிந்தால்,  லிங்கா, வேட்டைக்காரன்,தாண்டவம், இரண்டாம் உலகம், இஞ்சி இடுப்பழகி, தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பாகுபலி, அருந்ததி, ருத்ரா தேவி போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தனது திறமையினை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை அனுஷ்கா.


 






தற்பொழுது 39 வயதினை எட்டியுள்ள அனுஷ்கா, சினிமாத்துறையில் நுழைத்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் 16 ஆண்டுகளாக தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களின் வாயிலாக நடிகை அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். அதில், தங்கள் வாழ்க்கை நேரத்தை எடுத்து எனது வாழ்க்கையில் வித்தியாசங்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி எனவும் என் மீது அன்பு காட்டுபவர்களுக்கும், அனைத்து  படக்குழுவினருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் அனுஷ்காவின் ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.