தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக உள்ள நடிகர் அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது சினிமா கேரியர் குறித்த தகவல்களை காணலாம்.

  


‘ஆசை’ நாயகன்


1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்த அஜித், 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதேசமயம் 21 வயதில் மாடலிங் செய்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு முதன்முதலாக ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. அதன் வழியாக ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழிலும் எண்ட்ரீ கொடுத்தார். ஆனால் முதல் படம் முடிந்ததுமே விபத்து. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே இரண்டாம் படத்தில் நடிக்கிறார். பவித்ரா, ராஜாவின் பார்வையிலேயே, பாசமலர்கள் என நடித்தாலும், அஜித்துக்கு முதல் ஹிட் கொடுத்தது “ஆசை” படம் தான். அந்த காலக்கட்டத்தில் அவரை எல்லோரும் ஆசை நாயகன் என்றே அழைத்தார்கள்.  


‘பொறுமை’யின் சிகரம் 


அஜித் வழக்கம்போல ஒரு படம் ஹிட் என்றவுடன் அடுத்தடுத்து பல படங்கள் கமிட் ஆக ஆரம்பித்தார். ஆனால் அனைத்தும் வெற்றி பெறவில்லை. 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை படம் 3 பிரிவுகளில் தேசிய விருது வென்றது. 5 பிரிவுகளில் மாநில அரசின் விருதை வென்றது. 


நடிக்க வந்த 5 ஆண்டுகளில் 1998 ஆம் ஆண்டு தான் அவருக்கான ஆண்டாக அமைந்தது. அந்த வருடத்தில் மட்டும் காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அவள் வருவாளா என 3 ஹிட் படங்களை கொடுத்தார். ரசிகர்களின் எண்ணங்களையும் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்தார். 


1999 ஆம் ஆண்டு தான் அஜித் கேரியரில் அதிகப்பட்சமாக ஒரே ஆண்டில் 6 படங்கள் ரிலீசானது. இதில் வாலி படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்ததோடு, ஒரு கேரக்டர் வில்லன் என்பதால் நடிப்பில் அசால்ட் காட்டியிருந்தார். அவரின் நிஜ வாழ்க்கைக்கு பொருந்தி போகிற “பொறுமை” இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ என்பதற்கு சான்றாக ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’, ‘முகவரி’ ஆகிய படங்கள் அமைந்தது. 


ரசிகர்களின் ‘தல’ 


2001 ஆம் ஆண்டு வெளியான தீனா படத்தில் அஜித்தை பார்த்து நடிகர் மகாநதி ஷங்கர் ‘தல’ என அழைப்பார்.அதுவே அஜித்தின் அடைமொழியாக மாறிப்போனது. என்னதான் அஜித் விதவிதமான படங்களை நடித்தாலும், அது ஹிட்டானாலும், ஆகாவிட்டாலும், ஸ்க்ரீனில் அவர் வந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். அதனால் தான் அவர் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். 


அமைதிக்குப் பின் அஜித்


அஜித் ரசிகர்களுக்காக கதையை தேர்வு செய்கிறாரா என்றால் இல்லை என சொல்லலாம். தனக்கு பிடித்திருந்தால் போதும் கண்டிப்பாக ரசிகர்களும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டே ஒவ்வொரு படத்துலேயும் நடிக்கிறார். ஒரு படம் வெற்றி என்றால் அடுத்த 2 படங்கள் அவர் கேரியல் நிச்சயம் தோல்வியாக தான் இருக்கும். ஆனால் அந்த தோல்விக்குப் பின் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஒரு வெற்றி கிடைக்கும். இப்படி வாழ்க்கை தத்துவத்தில் சினிமா கேரியரை அமைத்து கொண்டுள்ளார். 


கடந்த 20 ஆண்டுகளில் அவர் 25 படங்களில் நடித்துள்ளார். அதில்  அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், துணிவு ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட் கொடுத்தது. 


சினிமாவில் 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், இதில் பல படங்களில் தன் இமேஜை துறந்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தான் நடித்த அசல் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அமிதாப்பச்சனின் ஏபிசி நிறுவனத்தில் படம் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தார். இப்படி தனக்கு பிடித்தவர்களுக்காக எதையும் யோசிக்காமல் செய்பவர் அஜித். 


தோல்வி என்றால் கோபப்படவும், வெற்றி என்றால் கொண்டாடவும் மாட்டார். அமைதி மட்டுமே அவருக்கான பதிலாக இருக்கும். அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கும். படம் நடிக்க போகிறார் என நினைத்த நேரத்தில் வேறு ஒரு துறையில் கவனம் செலுத்துவார். பிடித்தால் பைக் பயணம், சமையல் செய்வது என எதிர்பாராத சம்பவங்களை செய்து அஜித் ரசிகர்களின் மனதில் என்றும் “பாசத்தலைவன்” ஆகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.