தமிழ் சினிமாவில் இயக்குநர் நடிகராக அறியப்படுபவர் மாரிமுத்து. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் , 2014 ஆம் ஆண்டு வெளியான புலிவால் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். வாலி முதல்  சமீபத்தில் வெளியான தேள் திரைப்படம் வரையில் வில்லன் , குணச்சித்திர நடிகர் என பல கேரக்டர்களில் நடித்துள்ளார் மாரிமுத்து. ஆரம்ப நாட்களில் விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த மாரிமுத்து தற்போதும் அந்த நடிகர்களுடன் நடித்து வருகிறார். இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக அறியப்படும் இருவரின் உழைப்பு ஈடு செய்ய முடியாதது என்றாலும் கூட நடிகர் மாரிமுத்து அவர்களின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவர். அந்த வகையில் இருவரின் வளர்ச்சி மற்றும் குணங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். குறிப்பாக அஜித்தின் குணங்கள் குறித்தும் , அவருடன் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.




 


அதில் "நான் முதன் முதலில் ஆசை படத்தில்தான் அஜித் சாருடன் இணைந்து வேலை பார்த்தேன். வசந்த் சாருடன் சேர்ந்த நேரம் அது, அப்போது நான் அவரிடம் யார் சார் படத்தின் ஹீரோ என கேட்டேன். அமராவதினு ஒரு படம் பண்ணிருக்கான்பா ஒரு பையன் , நல்லா அழகா இருக்கான்னு சொன்னாரு. அந்த சமயத்தில் வான்மதி ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு படம்தான் அப்போது அவர் தமிழில் செய்திருக்கிறார்.  அந்த காலக்கட்டத்துலையே  எனக்கு அஜித் ரொம்ப நல்ல மனிதராக தெரிந்தார். உதவும் குணம் அதிகம் உள்ள மனிதர். அவர் சம்பாதிப்பதில் என்ன வந்தாலும் , அடுத்தவங்களுக்கு கொடுத்துடுவாரு. திருமண வாழ்க்கைக்கு பிறகு  அவர் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. தான் செய்யும் உதவியை முதலில் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். யாராவது போலியாக பேசினாலோ, போலியாக புகழ்ந்தாலோ  கண்டுபிடித்துவிடுவார். அவர்களை அப்பறம் சந்திக்கலாம் என அப்படியே தவிர்த்து விடுவார். அவங்களை பக்கத்திலேயே வைத்துக்கொள்ள மாட்டார். யாராவது நிதர்சனமாக பேசினாலோ, அல்லது அந்த படத்தில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் சார் என கூறினாலோ , அதனை காது கொடுத்து கேட்பார். நான் உதவி இயக்குநராக இருந்த பொழுது , அவர் பைக்கில்தான் ஷூட்டிங் வருவார். அந்த சமயத்தில் எனக்கு பீர் எல்லாம் வாங்கி கொடுப்பார். ரொம்ப ஜாலியா , இயல்பா இருப்பார்.  ரொம்ப நல்ல மனிதர், மேலும் பல உயரங்களை நிச்சயம் தொடங்குவார். அஜித் சார் அழகா இருந்தாலும் ஆரம்பத்தில் நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறார். விஜய் சார் தனது உணர்ச்சிகளை காட்ட மாட்டார். கணக்கிட்டுதான் அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பார் விஜய் . விஜயின் நிதானம் கலைஞர் கருணாநிதியின் நிதானத்திற்கு ஒப்பானது“  என நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.