பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலில் பிரசாத்:


அப்ரிட் ஷைன் இயக்கத்தில், நிவின்பாலி மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பில் உருவாகி கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ஆக்‌ஷன் ஹீரோ பைஜு”. இப்படத்தில் வில்லனாக நடிகர் என்.டி.பிரசாத் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி கடந்த சில மாதங்களாக இவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக என்.டி.பிரசாத் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். குறிப்பாக தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.




தூக்கிட்டு தற்கொலை:


இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று கொச்சி மாவட்டம் கமலசேரியில் உள்ள தனது வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தங்களது தந்தை தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பிள்ளைகள் அருகில் உள்ளவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர், 26ம் தேதி அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


போதைப்பொருள் விவகாரத்தில் கைது:


நிவின் பாலியுடன் நடித்த ஆக்ஸன் ஹீரோ பைஜு திரைப்படத்திற்காக மட்டும் அறியப்பட்டவர் அல்ல என்.டி.பிரசாத். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் வைத்திருந்ததற்காக இவர் கடந்த 2021ம் ஆண்டு எர்ணாகுளம் சுங்கவரித்துறையினரால் கைது செய்யப்பட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. கஞ்சா மட்டுமல்லாமல் பயங்கர ஆயுதங்களும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல்,கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.




புதிய திரைப்படங்கள்:


ஆக்ஸன் ஹீரோ பைஜு திரைப்படத்திற்குப் பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பிரசாத், சமீபத்தில் தான் ‘இபா’, ‘கிர்மானி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதேபோல, கடைசியாக, ஆக்ஸன் ஹீரோ பைஜு இயக்குநர் அப்ரிட் ஷைன் இயக்கிவரும் ஒரு திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பிரசாத் நடித்திருந்தார். ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக அப்ரித் ஷைன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருந்த நிலையில் பிரசாத் தற்கொலை செய்துகொண்டார்.


குடும்பப் பிரச்சனைகள் காரணமாக பிரசாத் தற்கொலை செய்துகொண்டிருப்பது மலையாள திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.