எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பொம்மி யானையை மீட்டு உயிரைக் காப்பாற்றியது குறித்து, முன்னாள் வனத்துறை மருத்துவர் அசோகன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியுள்ளேன். அக்காலத்தில் பல யானைகளை காப்பாற்றி இருந்தாலும் பொம்மி என்ற அம்மு யானை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. அநாதையான குட்டி யானைகளை வளர்ப்பது சிரமமான பணி. அவற்றை இரவும், பகலும் கண்காணிக்க வேண்டும். போதிய வசதிகள் செய்து தர வேண்டும்.


ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமாக நிலையில் மீட்கப்பட்ட அம்மு யானையை, தாய் யானையுடன் சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது. பின்னர் சத்தியமங்கலம் வனகால்நடை மருந்தகத்திற்கு அந்த யானை கொண்டு வரப்பட்டது. உடல் பலவீனமாகவும், வயிறு வீங்கியிருந்த நிலையிலும் இருந்தது. அந்த யானை பசியால் ஜல்லிக்கற்களை சாப்பிட்டு இருந்ததால், பால் குடிக்கவில்லை. மலம் கழிக்கவில்லை. பின்னர் மருந்து கொடுத்து சிகிச்சையளித்தோம்.




தினமும் 15 லிட்டர் பால் கொடுக்க வேண்டும். மாட்டுப்பால், ஆட்டுப்பால் ஆகியவை கொடுக்க முடியாததால், லக்டோஜின் கொடுத்தோம். தினமும் சத்தான மருந்துகள், உணவுகள் வழங்கினோம். தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும். குளிக்க வைத்து உடற்பயிற்சிக்காக நடைபயணம் அழைத்துச்செல்வோம். இதனைப் பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். அனைவராலும் விரும்பும் பெயர் அம்மு என்பதால், அந்த யானைக்கு அம்முக்குட்டி என பெயரிட்டோம். பெயருக்கு ஏற்ப அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக அந்த யானை இருந்தது. அம்மு என அழைத்தால் ஓடி வரும். தினமும் எங்களுடன் வந்து படுக்கும். பால் வேண்டுமென்றால் தும்பிக்கையை தூக்கியபடி குழந்தை போல சத்தமிடும். குழந்தையை தூங்க வைப்பது போல பேன், ஏசி போட்டு தூங்க வைப்போம்.


பின்னர் அம்மு பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொம்மி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு யானை வளர்ப்பிற்கு சிறந்த இடமாக உள்ளது. யானை வளர்ப்பு என்பது ஒரு கலை. 100 ஆண்டுகள் தொன்மையான முதுமலை யானைகள் முகாமில், யானை வளர்ப்பில் அனுபவம் மிக்கவர்கள் உள்ளார்கள். யானை பாகன்கள் குடும்பம் யானையை தத்தெடுப்பது போல வீட்டில் ஒரு குழந்தையாக வளர்க்கிறது. யானை மீது நாம் வைக்கும் அன்பை, அது திரும்ப தரும்.




குறைந்த காலமே என்னிடம் இருந்தாலும் ஒரு வருடம் கழித்து முதுமலைக்கு நான் பார்க்க சென்ற போது, என்னை அடையாளம் கண்டு அன்பை வெளிப்படுத்தியது. இந்த யானை பற்றிய படம் விருது பெற்றிருப்பது பெருமைக்குரியது. விருது பெற்றதை அடுத்து பலர் அந்த யானையைப் பற்றி என்னிடம் விசாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் எங்களது பங்கும் இருப்பதால் மகிழ்ச்சி. இது தமிழ்நாடு வனத்துறைக்கு ஒரு மகுடம். இப்படம் யானைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண