உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது; நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 




சந்தனக்கூடு வைபவம்:


நாகூர் தர்காவில், கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது; ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது  அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். 


ஏ ஆர் ரஹ்மான்-அமைச்சர் பங்கேற்பு!


இந்த விழாவில் ரசிகர்களால் இசைப்புயல் என செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கலந்து கொண்டார். இவருடன், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானும்  பங்கேற்றார். இவர்கள் மட்டுமன்றி, இந்த கந்தூரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


இதையடுத்து, நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது; நாகூர் தர்ஹா சந்தனக்கூடு மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


வைரலாகும் புகைப்படங்கள்:


 






ஏ ஆர் ரஹ்மான் சந்தன கூடு திருவிழாவில் பங்கேற்ற வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


கூட்டத்தில் தள்ளு முள்ளு:




நாகூர் தர்காவில் நடைப்பெற்ற சந்தனக்கூடு திருவிழாவில், பக்தர்கள் அனைவரும் தேரிலிருந்து எடுத்து வரப்படும் சந்தனக்கூடை தொட்டு வழிபடும் நிகழ்வு எப்போதுமே நடக்கும். இந்நிலையில், இன்று நடைப்பெற்ற திருவிழாவிலும் சந்தனக்கூடு கொண்டுவருபவரை தள்ளி விடும் பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் இந்த கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.