ஏற்கனவே கைமாறிய இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்களை தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு பிரபல சீரியல்கள் வேறு ஒரு சானலில் ஒளிபரப்பாக உள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


'கோலங்கள் கோலங்கள்…' என்ற பாட்டு எங்கோ ஓரிடத்தில் கேட்டாலும், எல்லோரும் வீடு சென்று அடைவது இருவது வருடங்கள் முன்பு வழக்கமாக இருந்தது. அதே போல அந்த நேரத்தில் பிரபலமான சீரியல் தென்றல். இந்த இரு சீரியல்களும் மீண்டும் ஒளிபரப்பாகிறது என்பதுதான் சீரியல் ரசிகர்களுக்கான இனிப்பான செய்தி.


இப்போது விஜய் டிவி, ஜீ தமிழ் சானல்கள் இளைஞர் பட்டாளத்தைக் கவரும் சீரியல்கள் நிறைய ஒளிபரப்பி வந்தாலும், பாரம்பரிய சீரியல் பார்வையாளர்களான ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை இன்னமும் கவர்ந்து வைத்திருப்பது சன் டிவி தான். அந்த ரசிகர்களை கவர எவ்வளவு முயற்சித்தும் இன்னமும் முடியாமல் இருக்கும் சானல்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதனாலேயே சன் டிவி எப்போதுமே சீரியல்கள் டிஆர்பி-யில் கிங்தான். ஆனால் அதற்கு புதிய டெக்னீக்கை பயன்படுத்தியது கலைஞர் டிவி. சில பழைய சன் டிவி சீரியல்களின் ரைட்ஸ் வாங்கி ஒளிபரப்பியது. அந்த யுக்தியை தற்போது கலர்ஸ் டிவியும் பின்பற்றுகிறது.



சன் டிவி இப்போதும் சீரியல்கள் மூலம் டிஆர்பி-யை தக்கவைத்து இருந்தாலும், அதன் ஆரம்பகால சீரியல்கள் போன்று பட்டி தொட்டி ஹிட் சீரியல்கள் ஒன்றும் தற்போது பெரிதாக இல்லை. ஏனெனில் அந்த கால சீரியல்கள் நமக்கு பல நினைவுகளையும் சேர்த்து வைத்திருந்தது. வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் இருந்து அந்த ரிமோட்டை வாங்கி நாம் வேறு சானல் மாற்ற முடியாமல் தவித்து, விளம்பர இடைவேளைக்காக காத்திருந்து அந்த நேரத்தில் வேறு சானல் பார்த்ததெல்லாம் இப்போது இல்லை. அவர்களுக்கென டிவியை ஒதுக்கிவிட்டு நாம் மொபைலோடு ஒன்றிவிட்டோம். அதுமட்டுமின்றி அந்த சீரியல்களில் பயன்படுத்தப்படும் வீடுகளும், உடைகளும், யதார்த்தமாக நம்மை, நம் வீட்டை ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதுள்ள சீரியல்கள் ப்ரம்மாண்டங்களின் அணிவகுப்பாகி விட்டது.


வீட்டுக்குள்ளேயே தங்க ஆபரணங்கள் பல அணிந்து, தேர்போல் திரிவது போன்ற அம்சங்கள் இல்லாமல் சீரியல்கள் இல்லை இப்போது. சாதாரண அழுக்கு படிந்த சுவர்கொண்ட வீடுகள், காட்டன் புடவை அணிந்த அம்மாக்கள் இருந்த சீரியல்கள் அவர்கள் பேசும் பிரச்சனையை மனதிற்கு மிகவும் நெருக்கமாக்கியது. அதுபோன்ற சீரியல்கள் வருவதில்லை என்ற வாதங்களும் அவ்வபோது சமூக வலைதளங்களில் தென்படும். ஆனால் இண்டஸ்ட்ரி அது போல மாறப்போவதில்லை, அதே சீரியல்களை பார்க்கலாம் என்ற ஐடியாவோடு களமிறங்கி சில 2000 ங்களில் பிரபலமான சீரியல்களை வாங்கி ஒளிபரப்பி வருகிறது கலைஞர் டிவி. அந்த லிஸ்டில் புதிதாக, எல்லோருக்கும் பிடித்த, அதிக ரசிகர்கள் கொண்ட இரு சீரியல்கள் வந்துள்ளன.



சன் டிவியில் மிகவும் பிரபலமான சிரியலாக ஒளிபரப்பாகி வந்த சீரியலில் ஒன்று தான் தென்றல். இந்த சீரியலில் தொகுப்பாளர் தீபக் மற்றும் ஷ்ருதி ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விகடன் டெலிவிஷன் தயாரித்திருந்த இந்த சீரியலுக்கு ஏகபோக ரசிகர்கள் உள்ளனர். அதேபோல பிரபல சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலும் மிகவும் பிரபலம். நடிகை தேவயாணி இதன் மூலம் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 1533 எபிசோடுகளாக ரசிகர்களை கவர்ந்திருந்தது கோலங்கள்.


மேற்குறிப்பிட்ட கோலங்கள், தென்றல் என்கிற இரு பிரபல சீரியல்களை தற்போது மீண்டும் மறு ஒளிபரப்பாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. சீரியல் உலகின் கடும் போட்டிகளை சமாளிக்க முடியாமல் மிகவும் திணறியது கலர்ஸ் தொலைக்காட்சிதான். ஆனால் இப்போது இந்த சீரியல்கள் மூலம் ஆழமாக கால் பதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் ரசிகர்கள் இதனை கண்டிப்பாக பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகுறது. அதுமட்டுமின்றி பலர் இதனை பாதியில் இருந்து பார்க்க தொடங்கி இருக்கலாம், அவர்களுக்கு முதலில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவையும் தூண்டும் என்பதால், எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது. கோலங்கள், தென்றல் ஆகிய 2 கிளாசிக் சீரியல்களும் மே 16 ஆம் தேதி முதல் மதியம் 1 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் கலர்ஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.