கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகள் ஆகியுள்ளதை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆண்டு வெளியான படம் “ஜிகர்தண்டா”. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன், சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி என பலரும் நடித்திருந்தனர். புதுமுக இயக்குநர் தயாரிப்பாளருக்காக ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு தாதாவைப் பற்றி எப்படி படம் எடுக்கிறார். அதில் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடி கலந்து ரசிகர்களை கவரும் வண்ணம் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருந்தார். 


ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது கேரக்டரில் நடித்த  பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இதன்பிறகு இறைவி, பேட்ட , மகான் என கவனிக்கத்தக்க படங்களை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் எப்போது ஜிகர்தண்டா படத்தின் 2 ஆம் பாகத்தை எடுப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் நீண்ட காலமாக இருந்தது. அவ்வப்போது இதுகுறித்த தகவல்கள் வந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.  மேலும் இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிப்பார் எனவும் தகவல் வெளியானது. இதனிடையே சமீபத்தில் வெளியான லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்திற்கான ட்ரோல்களில் ஜிகர்தண்டா படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதாவது ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த படத்தைக் காண பொதுமக்களை மிரட்டி அழைத்து செல்வார்கள். அப்படியான காட்சியைத் தான் நெட்டிசன்கள் பதிவிட்டிருந்தனர். 







இந்நிலையில் ஜிகர்தண்டா படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகள் ஆகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜிகர்தண்டா படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் உருவாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.